முள்ளிவாய்க்கால் கஞ்சியும் காஸா நிவாரணமும் சிங்கள ஸ்ரீலங்கா பௌத்த தேசம், பிரித்தானியரிடமிருந்து விடுதலையடைந்த நாள் முதல் உலகம் முழுவதும் பிச்சை எடுத்தே இந்த நாட்டை ஒப்பேற்றி வருகின்றது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தன் கையை இன்னும் அகல விரித்து தன் யாசகப் படலத்தை பரவலாக்கியுள்ளது ஸ்ரீலங்கா. ஸ்ரீலங்காவின் கண்ணீரைத்துடைக்க முதலாவதாக ஓடிவந்தது அண்டை நாடான பாரத தேசம்தான்.
எமது தொப்புள் கொடி உறவுகள் உணவுக்காகப் போராடும் போது நாங்களும் எமது பங்குக்கு ஏதாவது செய்யவேண்டும் என எண்ணிய தமிழக அரசு, ஸ்ரீலங்காவுக்கு 5 பில்லியன் டொலர் பெறுமதியான உணவுப்பொருள்களைகப்பலில் அனுப்பி வைத்தது.
தமிழக அரசு எமது உடன்பிறப்புகளுக்கு உதவும் போது நான் மட்டும் பார்த்துக்கொண்டிருப்பதா? என்று யோசித்த தமிழக யாசகரான பால்பாண்டி என்பவர், தான் யாசகம் பெற்றுச் சேமித்து வைத்திருந்த 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாவை தன் சார்பிலான நன்கொடையாக வழங்கினார். அவ்வாறு ஒரு யாசகர் வழங்கிய அந்தப்பணம் உட்பட தமிழக அரசு வழங்கிய நன்கொடை தமிழர்களுக்கு மட்டுமல்லாது, சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சேர்த்தே பகிர்ந்து வழங்கப்பட்டது. தாம் வழங்கிய உதவியை மலையக மக்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ மட்டும் தான் முன்னுரிமை அடிப்படையில் வழங்கவேண்டும் என எந்தக் கோரிக்கையையும் இந்திய அரசோ, தமிழக அரசோ முன்வைக்கவில்லை. ஆனால் பார்வையற்றோருக்கு சிகிச்சை என்ற பெயரில் வந்து காத்தான்குடி முஸ்லிம்களுக்கு மட்டும் சவூதி அரேபியா உதவுகின்றது. நல்லவேளையாக அந்தக் குறுகிய பார்வை தமிழக அரசிடம் இருக்கவில்லை.
இலங்கை மக்களில் 17 வீதமானோர் அல்லது 3.9 மில் லியன் மக்கள் உணவுப்பற்றாக்குறையை தற்போதும் எதிர்கொள்வதாக உலக உணவு ஸ்தாபனம் தெரிவித் துள்ளது. இலங்கையில் 2.3 மில்லியன் சிறுவர்கள் உணவுக் காகத் திண்டாடுவதாகவும், இலங்கைச் சிறுவர்களின் பட்டினியைப்போக்க உதவுமாறும் 'யுனிசெப்' எச்சரித் துள்ளது. இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கும் சம காலத்தில்தான் ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை காஸா விலுள்ள மக்களுக்கு நிவாரண நிதியாக ஸ்ரீலங்காஅனுப்பி வைத்துள்ளது. ஐ.நா.வும் 'காலத்தால் செய்த உதவி' என இலங்கையின் உதவிக்கு நன்றி தெரிவித்து பட்டோலை அனுப்பியுள்ளது. அதாவது, தான் உலகெல்லாம் பிச்சை எடுத்த பணத்திலேயே, ஸ்ரீலங்கா அரசு காஸாவுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. சொல்லப்போனால் தமிழக யாசகர் பால்பாண்டி அனுப்பிய 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவும் இதில் அடக்கம் என்றும் சொல்லலாம்.
தனது சொந்தமக்கள் முள்ளிவாய்க்காலில் கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் அவலப்பட்ட வேளையில் தமிழக அரசும் புலம்பெயர் உறவுகளும் அனுப்பிய அத்தியாவசிய மருந்துகளைக் கூட திருப்பி அனுப்பிவிட்டு, அந்த மக்களை உணவின்றி, மருந்தின்றி வதைத்ததும் இதே ஸ்ரீலங்காதான். ஏதுமில்லா நிலையில் கஞ்சியைக் குடித்தாவது உயிர் பிழைக்கும் நோக்கோடு, கஞ்சிவாங்க வரிசையில் நின்ற வர்களையும் குண்டு வீசி கொன்றொழித்ததும் இதே ஸ்ரீலங்கா அரசுதான். அப்படிச் சொந்த மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசுக்கு வராத கருணை, காஸா மக்கள் மீது பிறந்ததும், தானே பொருளாதாரத்தில் 'ததிங்கிணத்தோம்' போட்டுக் கொண்டிருக்கையில்கூட, பலஸ்தீனியர்களுக்கு நிவாரணத்தைக் கொடுப்பதும் ஓர் அதிசயம்தான். தனக்குத் தனக்கு என்றால் தான் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்கும், ஆனால் ஸ்ரீலங்கா அரசைப் பொறுத்தவரை அது தலைகீழாகி பிறருக்கு மட்டும் படக்குப் படக்கென அடிப்பதன் மர்மம்தான் புரியவில்லை.
நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதென்பது மிகச்சரியானது. அதைத் கொச்சைப்படுத்துவதோ அல்லது சிறுமைப்படுத்துவதோ இந்தப் பத்தியின் நோக்கமல்ல. ஆனால், தன்கையில் படிந்திருக்கும் சொந்த மக்களின் குருதியோடும், தள்ளாடும் பொருளாதாரத்தோடும் தலைகுனிந்து நிற்கும் ஸ்ரீலங்கா, காஸாவுக்கு நிவாரணம் வழங்கும் தகுதியும் வல்லமையும் கொண்டுள்ளதா என்பதுதான் இங்கு மிகப்பெரும் கேள்வியும் விமர்சனமும்...!
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.