'திருகோணமலையில் நினைவேந்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களைக் கைது செய்துமிருக்கிறது சிறிலங்கா அரசு. இது கண்டிக்கத்தக்கது. 15 வருடங்களுக்கு முன்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை தமிழர்கள் நினைவேந்தும் இந்தத் தருணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது காயங்களை ஆற்றும் கூட்டு நினைவேந்தலின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. தங்கள் நேசத்துக்குரியவர்களை நினைவுகூரும் தமிழர்களை துன்புறுத்தும் - அச்சுறுத்தும் - கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கமுடியாது. கடந்த வருடம் வெசாக்கை முன்னிட்டு சிறிலங்கா பொலிஸார் உள்ளூர் மக்களுக்கு பிஸ்கட்கள் போன்றவற்றை வழங்கியிருந்தனர். ஆனால் திருகோணமலை சம்பவம் அவர்களின் போலி நாடகத்தை வெளிப்படுத்தியுள்ளது' என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்புச் சுட்டிக்காட்டுவது நூற்றுக்கு நூறு வீதம் சரியானதே. சிறிலங்காவின் உண்மை முகத்தை அந்த அறிக்கை தோலுரித்துக்காட்டியிருக்கின்றது.
தமிழர்கள் மனதில் ஆறாத ரணமான முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூருவதற்குக் கூட தடைவிதிக்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இலங்கையைத் தவிர வேறெங்கும் இருக்கப்போவதில்லை. கடந்த காலங்களிலும் தமிழர்கள் தங்கள் நினைவேந்தல்களைச் செய்வதற்கு சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் இடமளித்திருக்கவில்லை. கடுமையான சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து வேண்டா வெறுப்பாக அதை அனுமதித்திருந்தாலும், ஏதோ ஓர் வகையில் அதைத் தடுப்பதற்கு - குழப்புவதற்கு அவர்கள் பகீரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டுதான் வருகின்றனர் . சிங்கள - பௌத்த பேரினவாதத் திமிரே இந்த நாட்டின் குருதிச் சகதிக்கும் அதன் பின்னரான பொருளாதாரப் படுகுழியில் வீழ்வதற்கும் காரணம். சிங்கள - பௌத்த பேரினவாதத்தை நிலைநிறுத்துவதற்காக தமிழர்களை இனவழிப்புச் செய்வதற்காக நாடு நாடாக கடன் வாங்கி இன்று வங்குரோத்து நிலையில் வந்து நிற்கின்றது. இதன் பின்னரும் தன் கொள்கையை அது மாற்றிக்கொள்வதாகத் தெரியவில்லை. மாறாக இன்னும் தீவிரப்படுத்தியிருக்கின்றது.
சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் முக்கியமான திணைக்களம் சிறிலங்கா பொலிஸ். பேர்ள் அமைப்பு சுட்டிக்காட்டுவதைப்போல, வெசாக் நாளில் பிஸ்கட் வழங்கும் அதே சிறிலங்கா பொலிஸ்தான், தமிழர்களின் நினைவு கூரலுக்கும் - முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலுக்கும் முட்டுக்கட்டை போடுகின்றது. ஒரு கண்ணில் வெண்ணெயையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் தடவுகிறது சிறிலங்கா பொலிஸ். இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டும் பேர்ள் அமைப்பு இன்னொரு முக்கியமான விடயத்தையும் அம்பலப்படுத்தியிருக்கின்றது. இப்படி இனப்பாகுபாட்டுடன் நடந்து கொள்ளும் சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கமுடியாது என்றும் குறிப்பிட்டிருக்கின்றது. நல்லிணக்கத்துக்கான செயலணியை உருவாக்கி மற்றொருநாடகத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகின்றது. அது இதயபூர்வமான செயற்பாடல்ல, வெறும் நாடகமே என்பதை திருகோணமலைச் சம்பவமே தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
வெறும் உதட்டளவில் நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசுவதால் பயனில்லை. அடிப்படையில் மாற்றம் வேண்டும். சிங்கள - பௌத்த மேலாதிக்க சிந்தனையிலிருந்து ஆட்சியாளர்கள் வெளிவரவேண்டும். அந்தச் சிந்தனைப் போக்கிலிருந்து சிறிலங்காவின் அரச திணைக்களங்கள் வெளிவரவேண்டும். இந்த மாற்றங்கள் நிகழாமல் எந்தவொரு மாற்றமும் நாட்டில் நடக்காது.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.