கிழக்குப் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்
(ஆதவன்)
போர் நிறைவுற்று 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசுக்கு பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.
-இவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:-
திருகோணமலை சேனையூரில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைப் பொலிஸாரின் இந்த அத்துமீறல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடாத்தாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உரிமையை வேண்டிப் போராடிய ஓர் இனத்தின்மீது இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய இனவழிப்பால் இறுதி எட்டு மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசாலும் அரச படைகளாலும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கைவைத்துள்ளது.
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை பன்னாட்டுச் சமூகம் கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்க வேண்டும் - என்றுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.