முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள்களில் இருக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நெருங்க நெருங்க சிறிலங்கா அரசாங்கத்தின் கெடுபிடிகளும் -அடக்குமுறைகளும் உச்சம்தொடுவது வழமை. இப்போதும் அது தனது கோரப்பற்களை விரித்துக்கொண்டு தமிழர்கள் மீது பாய்ந்து கடித்துக் குதறிக்கொண்டுதான் இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது நினைவேந்தலின் பிரதான அடையாளம். முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பரிமாறுவது இறுதிப்போரின் வலியை ஊடுகடத்துவதாகும். நீதிக்கான தேடலில் நினைவேந்தல் மிக முக்கியமான ஆயுதம். ஈழத் தமிழர்களிடம் அந்த ஆயுதம் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.
இதனால்தான் சிங்கள தேசம் கடும் சினம் கொள்கின்றது. அதன் வெளிப்பாடுதான் திருகோணமலையிலும் அம்பாறையிலும் எதிரொலித்திருக்கின்றது. திருகோணமலையில் நீதிமன்றத்தின் தடையை சிறிலங்கா பொலிஸார் பெற்றிருக்கின்றனர். அதுவும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகிப்பதால் தொற்றுநோய் அபாயம் இருப்பதாக அறிக்கையிட்டு தடையைப் பெற்றிருக்கின்றனர். இது மிகவும் கேவலமான செயல் என்பதையும், நீதிமன்றங்கள் பொலிஸார் எதைச் சொன்னாலும் அதைக்கேட்டு தடை வழங்கும் அளவுக்கு சுயாதீனத்தை இழந்து விட்டனவா என நாடாளுமன்றத்தில் வைத்துக் கேள்வி எழுப்பியிருந்தார் செ.கஜேந்திரன். இந்த விடயத்தில் தொற்றுநோய் தொடர்பில் அறிக்கையிடக் கூடியவர்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களே. பொலிஸார் எப்படி அதைச் சொல்லி தடையைப் பெறமுடியும் என முன்னாள் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஏதாவதொரு விதத்தில் தடையைப்பெறுவதற்கு சிறிலங்கா பொலிஸார் முயற்சிக்கின்றனர். இது அவர்களது செயற்பாடு என்பதற்கு அப்பால் பௌத்த - சிங்கள பேரினவாதத்தின் போக்கு அது. பௌத்த சிங்கள பேரினவாதத்தில் ஊறித்திளைத்த ஆட்சியாளர்களும், அவர்களது அடிவருடிகளும் அதை நடைமுறைப்படுத்த முற்பட்டதன் விளைவே முள்ளிவாய்க்கால் பேரவலம். அந்தப் பேரவலத்தைக் கூட நினைவுகூரக் கூடாது என்பதற்காக தேடித்தேடி தடைபோடுகின்றனர். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில்- அவரது சகோதரரும் இறுதிப்போரின் இனப்படுகொலையாளியுமான கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த காலத்தில் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பாதுகாப்புத் தரப்பினரைக் களமிறக்கித் தடுத்தார்கள். நல்லாட்சிக் காலத்தில் நினைவேந்தலுக்கான கெடு பிடிகள் குறைவாக இருந்தனவே தவிர முற்றாக அகலவில்லை. கோத்தாபய ஜனாதிபதியாகத் தெரிவான காலத்தில் கொரோனா பேரிடரைக் காட்டி முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை தொடர்ச்சியாகத் தடுத்தனர். தற்போது ராஜபக்சக்களின் ஆதரவுடன் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதை தொடரச் செய்கின்றார்.
நினைவேந்தல்கள் ஊடாக முள்ளிவாய்க்கால் கஞ்சி ஊடாக இறுதிப்போரில் நடந்தேறிய கொடூரங்கள் மீளவும் மீளவும் நினைவுபடுத்தப்பட்டுக்கொண் டேயிருக்கும். முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தின் வலி அடுத்த தலைமுறைக்கும் ஊடுகடத்தப்பட்டுக் கொண் டிருக்கும். பட்டினியால் முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட வேதனையை எதிர்கால சந்ததியும் உணரும். இந்த ஊடுகடத்தல் நீதிக்கான தேடலை இன்னும் வீரியமாக்கிக்கொண்டே செல்லும். இதனால் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் எந்தவழியிலாவது அதைத்தடை செய்வதற்கு முயல்கின்றனர். ஆனாலும் தடைகளைத்தாண்டி நினைவேந்துவது தமிழர்கள் கடமை. இந்தத்தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் எங்கள் உறவுகளை நினைவு கூருவோம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.