(புதியவன்)
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவது தொடர்பாக ஊடகங்களில் விவாதிப்பதால் இலங்கை பங்குச்சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அரசதலைவர் குறிப்பிட்டுள்ளமை, தொடர்பான தெளிவை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என இலங்கை நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதிக்கான மையத்தின் ஊடக சந்திப்பு சாய்ந்தமருது அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்றது. இங்கு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடும்போது,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவது தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதால் பங்குச் சந்தையில் ஒரு குளறுபடியான நிலை தோன்றுவதாகவும், இந்த தளம்பல் நிலையின் காரணமாக வர்த்தகர்கள் குழு இலாபமீட்டுவதாகவும் குற்றச்சாட்டை அரச தலைவர் முன்வைத்திருந்தார்.
அவ்வாறு கருத்தாடல்கள் ஊடகங்களில் இடம் பெறுவதால் இலாபம் அடையும் வர்த்தகர்கள் தொடர்பாக வெளிப்படையாக அவர் குறிப்பிடவில்லை. இதில் சந்தேகம் இருக்கின்றது. அரசதலைவர் சார்ந்து இருக்கின்ற மொட்டுக்கட்சி உறுப்பினர்களே நாடாளுமன்ற தேர்தல் அரசதலைவர் தேர்தலுக்கு முதல் நடைபெற வேண்டும் என்று ஊடகங்களில் தெரிவித்து வருகின்றார்கள். எனவேதான் அரசதலைவர் குற்றம் சாட்டுவது தான் சார்ந்திருக்கும் மொட்டுக்கட்சி உறுப்பினர்களையா ? அல்லது வேறு கட்சி உறுப்பினர்களையா ? என்ற சந்தேகம் இருக்கின்றது.
இவ்வாறான பொருளாதார நிலைமைகளால்தான் இந்த நாடு இன்று வங்குரோத்து நிலையை அடைந்திருக்கின்றது. இவ்வாறான சுயநலமிக்க வர்த்தகர்களால் இந்த நாடு இன்னும் வங்குரோத்து நிலையை அடையக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் நாம் இந்த வேண்டுகோளை விடுகின்றோம். பொருளாதார நிலமை இன்னும் மோசமடையகூடாது என்கின்ற விடயத்தில் இந்த நாட்டு மக்கள், சிவில் சமூகம் மிகவும் அவதானமாக இருக்கின்றது. எனவேதான், இந்த இலாபம் அடையும் வர்த்தகர்கள் யார்? இதில் வெளிப்படையாக அரசதலைவர் தெளிவை இந்த நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்று பகிரங்கமான வேண்டுகோளை விடுகின்றோம் என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.