புதியவன்
ஈரானிய அரச தலைவர் ரைசி உயிரிழந்தமை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல நாடுகளின் தலைவர்களும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். ரைசியின் உயிரிழப்பு கொலையா என்ற கோணத்திலும் பல தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
ஈரான் அரச தலைவர் இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஈரானிய அரசதலைவர் பயணித்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. ஈரானிய அரச தலைவர் இப்ராஹிம் ரைசி அந்நாட்டின் அயலுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட பலர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய அரச தலைவர் அசர்பைஜான் அரச தலைவர் இல்ஹாமை நேற்று சந்தித்துவிட்டு ஈரானுக்கு திரும்பும் வழியிலேயே அவரது உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாகக் கூறப்பட்டது. ஈரானிய அரச தலைவர் பயணித்த உலங்கு வானூர்தியுடன் மூன்று உலங்கு வானூர்திகள் பயணித்ததாகவும், இதில் ஈரானிய அரச தலைவர் பயணித்த உலங்கு வானூர்தியை விட மற்றைய இரண்டு உலங்கு வானூர்திகளும் பத்திரமாக வந்து சேர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஈரானிய அரச தலைவர் பயணித்த உலங்கு வானூர்தி மாயமானதையடுத்து தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தன. மோசமான காலநிலை காரணமாக ஈரானிய அரச தலைவரின் உலங்குவானூர்தி காணாமல்போன இடத்தைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. இருப்பினும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த மீட்பு பணிகளின் போது, துருக்கி அனுப்பிய ஆளில்லா வானூர்தி முக்கிய தடயத்தைக் கண்டுபிடித்தது. மலைப்பகுதியில் ஈரானிய தலைவர் பயணித்த உலங்குவானூர்தியின் பாகங்கள் தென்பட்டன. அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்கும் அறிகுறி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரானிய அரச தலைவர் ரைசி உயிரிழந்தமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அண்மைக்காலமாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றது. பலஸ்தீனத்துடன் மோதலில் ஈடுபடும் இஸ்ரேல், சிரியாவிலுள்ள ஈரானிய தூதரகத்தை தாக்கியதையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரானின் போர்த்தளபதி கொல்லப்பட்டமைக்கு அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சுமத்தியிருந்தது. இவ்வாறானதொரு நிலையில் ஈரானிய அரச தலைவர் பயணித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கியமை சதிச் செயல் எனவும் ஈரானிய அரச தலைவர் கொலை செய்யப்பட்டதாகவும் அவதானிகள் கருத்திடுகின்றனர்.
குறிப்பாக ஈரானிய அரச தலைவருடன் 3 உலங்கு வானூர்திகள் பயணித்த நிலையில், ஈரானிய அரச தலைவரின் உலங்குவானூர்தி மாத்திரம் எவ்வாறு மோசமான காலநிலைக்குள் சிக்கும் என்ற கேள்வியை முன்வைக்கும் அவதானிகள், ஈரானிய அரச தலைவரின் உயிரிழப்பின் பின்னால் சதிச் செயல் நிச்சயம் மறைந்திருக்கும் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.
ஈரானிய அரச தலைவரின் சாவு இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.