உறுதியாக உரைக்கிறார் உதயங்க வீரதுங்க!!!
(புதியவன்)
முக்கியமான சட்டங்களை இயற்றியதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும். அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. அவருக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கப்போவதுமில்லை என கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசமைப்பின் படி அரச தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடுவது பேச்சுக்கு மாத்திரமே வரையறுக்கப்படும். அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலே நடத்தப்படும் என்பதை உறுதியாக குறிப்பிடுகிறேன். முக்கியமான சட்டங்களை இயற்றியதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும். அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்ரெம்பர் அல்லது ஒக்ரோபர் மாதம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.
அரச தலைவர் தேர்தலில் வெற்றி பெறுபவர் இந்த நாடாளுமன்றத்தை நிச்சயம் கலைப்பார். புதிய அரச தலைவர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஓரிரு மாதங்கள் முன்னதாக நாடாளுமன்றத்தை கலைப்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
அரச தலைவருக்கும்,பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்த அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதை பஷில் ராஜபக்ஷ அரச தலைவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர் தேர்தலில் போட்டியிடமாட்டார். ஒருவேளை அவர் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவதாக பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை. எமது வேட்பாளரை நாங்கள் களமிறக்குவோம்" என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.