ஆதவன்.
தமிழர்களிடத்தில் அண்மைக்காலமாக ஒரு பெருந் தொற்றுநோய் தீவிரமாகப் பரவி வருகின்றது. கொரோனாவைவிடவும், டெங்குத் தொற்றைவிடவும்; அந்த நோய் கொடியது. அதற்குப் பெயர்தான் மூடநம்பிக்கை. வேளாண்மையில் யதார்த்தத்துக்குப் புறம்பான, 'சாத்தியமற்ற அறுவடையைக்' கருத்திற் கொண்டு, பாரம்பரிய விதைகளை - கன்றுகளை புறக்கணிப்பதில் ஆரம்பித்த இந்த நோய், தற்போது வாஸ்து சாஸ்திரத்தின் பேராலும் 'பணத்தைப் பெருக்கும் அதிர்ஷ்டம்' என்ற மிதமிஞ்சிய பேராசையாலும் - வீட்டுக்கு வீடு வாசற்படியாக' ஒவ்வொரு வீட்டையும் ஆட்கொண்டிருக்கின்றது. இந்தக் கண்மூடித்தனமான - பிற்போக்குத்தனமான நம்பிக்கையால், தற்போது அரியணை ஏற்றப்பட்டிருக்கும் ஓர் அம்சம்தான் ஆகாயத்தாமரை. இதை, 'வலிதரக்கூடிய பேராபத்தான நிலை' என்று கோடுகாட்டியிருக்கின்றார் சூழலியல் ஆர்வலரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர், மரபணு மாற்றப்பட்ட மூங்கில்களைக் கொள்வனவு செய்வதில் எம்மவர்கள் அதீத ஆர்வம் காட்டினார்கள். சிறியதும், அழகானதுமான சாடிகளில் வளர்க்கப்பட்டிருந்த மூங்கில்கள், எம்வீடுகளின் தலைவாசல்களில் தனியிடம் பிடித்துக்கொண்டன. வாஸ்து, பணம், அதிர்ஷ்டம் இவைதான் இந்தக் கண்மூடித்தனமான நடத்தைக்குச் சொல்லப்பட்ட காரணங்களாக அமைந்தன. இதைத் தொடர்ந்து இப்போது கருங்காலி மாலைகள், குபேரன் கன்றுகள், ஆகாயத்தாமரை என்பனவும் அதே பேர் களால் தமிழர்களிடத்தில் பரவலாக அறியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கன்றுகள் எத்தகையவை, இந்தக் கொள்வனவுக்காகச் சொல்லப்படும் காரணங் களின் உண்மைத்தன்மை (வாஸ்து, பணம், அதிர்ஷ்டம்) என்ன? என்ற தெளிதலும், அதற்குரிய தேடுதல்களும் இருந்தால், தமிழர் சமூகம் இன்று இவ்வளவுதூரம் கண்மூடித்தனமான சமூகமாக சிந்தனைப் பிறழ்வான சமூகமாக மாறிக் கொண்டிருந்திருக்காது.
ஆகாயத்தாமரைகள் எனப்படுபவை, கட்டற்று வளர்ந்து காலப்போக்கில் ஒரு குளத்தையே ஆக்கிரமிக்கும் சக்திமிக்கவை. அவற்றின் பூர்வீகமான தென்னமெரிக்கக் கண்டத்தில் இவை ‘அதி அபாயகரமானவையாகவும்', சூழலியல் தீங்கை ஏற்படுத்துபவையாகவும் அறியப்படுகின்றன. அத்துடன் அந்தத் தேசங்களில் இவை 'பிசாசுச் செடிகளாக' வெறுக்கப்படவும் செய் கின்றன. யாழ்ப்பாணம் -ஆரியகுளத்தில் விரவியிருந்த இந்தப் படர்கொடிகள் பெரும் சிரமத்தின் பின்னால் அகற்றப்பட்டமை பலருக்கு நினைவிருக்கலாம். அவ்வாறான ஓர் ஆபத்தை - அச்சத்தைத்தான் இன்று எம்மவர்கள் வலிந்துசென்று வீடுகளுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அதுவும் ஒரு கன்றுக்கு நூறு ரூபா முதல் இருநூறு ரூபா வரை வாரிவழங்கி அள்ளிச்செல்கின்றனர்.
ஆகாயத்தாமரைகள் வேர்மூலம் பரவக்கூடியவை. பிரமிட்முறை என்பார்களே, அதற்கொப்பான பரவல் இது. ஒன்றில் இருந்து இரண்டு, இரண்டில் இருந்து நான்கு, நான்கில் இருந்து பதினாறு என அவை பல்கிப்பெருகும் வேகம் கணிக்கமுடியாதது. இத்தனைக்கும் இந்தத் தாவரம் பரவுவதற்கு உயிர்ப்புடன் (அரும்புடன்) உள்ள சிறு வேர்த்தண்டுபோதும். வீடுகளில் இவற்றை வைத்துப் பராமரிக்கும்போது அவை தெரிந்தோ தெரியாமலோ ஒரு குளத்திலோ அல்லது இதர நீரேந்துப் பகுதியிலோ சங்கமிப்பின் அதன் ஆபத்தம்சத்தை அளந்து எழுத முடியாது. பெரும் நீராதாரமே இந்தத் தாவரத்தால் சவாலுக்குட்பட்டு இருப்பை இழக்கும். 'முற்றத்தில் துளசிச்செடி: மூலையில் வேப்ப மரம்' என்றிருந்த கலாசாரத்தின் உரித்தானவர்கள் நாம். எம் முன்னோர் எமக்காகப் பார்த்துப்பார்த்து உருவாக்கிச் சென்ற இந்த மரபுகளை அதே உயிர்ப்புடன் எதிர்காலச் சந்ததிக்குக் கடத்துவது எம்முன் உள்ள பெரும் கடமையாகும். அதையெல்லாம் விடுத்து, ஆகாயத்தாமரைகள், மரபு மாற்றப்பட்ட மூங்கில்கள், குபேரன் கன்றுகள் என ஓடிக்கொண்டிருப்பது எத்தனை பெரிய அபத்தம். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.