(பட்சி)
பலநாள் கள்ளமண் டிப்பர் ஒருநாள் சுடுபடும். இதை கிட்டடியில் புத்தூரில் சூடு வாங்கின டிப்பர் மூலமா அறிஞ்சிருப்பியள். ஆனால் அந்த டிப்பர் பற்றி அறியாடு கன சங்கதியன் இப்பதான் ஒவ்வொண்டா வெளிக்கிடுதாம், உந்த டிப்பர் புத்தூர்ல சூடு வாங்கினாலும் அதின்ர பூர்விகம் பூநகரிதான். அங்க இருந்துதான் உந்த டிப்பர் ஐந்கிருக்கு. சனிப்பிணம் தனிப்பிணமா போகாதெண்டமாதிரி உந்த டிப்பர் தனிச்சு வாறேலை. அதோட இன்னும் பத்துப் பதினைஞ்சு டிப்பர்கள் சேர்ந்து கூட்டமாத்தான் வாறவையாம், அமைச்சரின்ர புண்ணியத்தில 'நாரா' நிறுவனத்தில வேலைக்குச் சேர்ந்த ஒருத்தர்தான் இவ்வளவு டிப்பரையும் கட்டி மேய்க் கிறாராம்.
பூநகரியில எந்த இடத்தில தோண்டினாலும் சொரியலாத்தான் மண் வரும். அதால அனுமதி குடுக்காத இடங்களிலயெல்லாம் டிப்பரை முதல்நாளே விட்டு மண் ணைத் தோண்டி எடுத்து வைச்சிடுவினம், மண்ணை பூநகரியில் தோண்டினாலும் ஓர்டர் எடுக்கிறதென்னவோ யாழ்ப்பாணப் பக்கம்தான். இரவோட இரவா சங்குப்பிட்டி தாண்டி, யாழ்ப்பாணத்துக்கு மண்ணைப் பறிச்சுப்போட்டு விடியிறதுக்குள்ள தங்கட இடத்துக்குப் பத்திரமாப் போய்ச் சேர்றதுதான் இவையின்ர ஸ்ரைல், பொலிஸ்காரர் எப்ப அயர்ந்து போய் நிப்பினம் எண்டு முன்னுக்கு ஒரு றெக்கியை விட்டுப் பாத்துப்போட்டுத்தான் உந்த டிப்பர்க்கூட்டம் மண்ணை இறக்கிட்டு ஓடியாறதாம். அப்பிடியும் றெக்கி பிழைச்சுப் போய், திடீரெண்டு எங்கையும் பொலிஸ்காரர் மறிச்சால், இந்த டிப்பர்க்கூட்டம் அவைக்கு இடிக்கிற மாதிரி வெருட்டிப் போட்டு ஓடித் தப்பின கதையும் கனக்க இருக்கு. அப்பிடியும் பொலிஸ்காரர் கலைக்கத் தொடங்கினால் இந்த டிப்பர்க்காரர் ஒரு 'ட்ரிக்ஸ்' வைச்சிருக்கினம். நடுறோட்டில டிப்பரை வெட்டி வெட்டி ஓடிக்கொண்டு அப்பிடியே ஏத்திக் கொண்டந்த மணலை கொட்டிப் போட்டு போறதுதான் அந்த 'ட்ரிக்ஸ்',
இப்பிடி நடுறோட்டில மண்ணைக் கொட்டினால் அதைத் தாண்டி உடனடியா பொலிஸ்காரர் டிப்பரைக் கலைச்சுக் கொண்டு வர ஏலாது. அப்பிடி வந்தால் அவை மோட்டார் சைக்கிளோட நடுறோட்டில் மணலில சறுக்கி விழவேண்டியிருக்கும். அதால மண்ணை அங்கால தள்ளிப்போட்டு பொலிஸ்காரர் வாறதுக் குள்ள டிப்பர் நாலைஞ்சு மைலுக்கு அங்கால போடும். அதைவிட மணல் டிப்பரில இல்லாட்டி, என்னெண்டு அதில மணல் கடத்தினதெண்டு பொலிஸ்காரர் எண் பிக்க முடியும்? அதால பாம்பு செட்டையைக் கழட்டிட மாதிரி உந்த பூநகரி டிப்பர்க்கூட்டம் மண்ணைக் கவிட்டுக் கொட்டிப்போட்டு ஓடிறதை பொலிஸ்காரரும் கணநாளாப் பார்த்துக் கொண்டிருந்தவை. ரண்டு மூண்டு கிழமைக்கு முதலும் சிறுப்பிட்டி பெற்றோல் செற்றுக்கு பக்கத்தில இதே விளையாட்டுக் காட்டிப் போட்டு டிப்பர்க்காரர் ஓடியிருக்கினம். அதாலதான் இந்தமுறை துவக்கால சுட்டுப் பிடிக்கிறதெண்ட பிளானோட பொலிஸ்காரர் ஒளிச்சு நிண்டிருக்கினம். பொலிஸ் இல்லையெண்ட துணிவில வரேக்கதான் வெடி விழுந்திருக்கு. அதாலதான் மணலும் கையுமா ரண்டுபேர் மாட்டுப்பட்டவை. இப்ப அவையை வெளியில எடுக்கிறதுக்கு உள்ளுக்கால சிலர் அரசியல்ரீதியா அலுவல் பாக்கினமாம். என்னதான் சட்டம் போட்டு சுட்டுப் பிடிச்சாலும், இப்பிடித் திட்டம் போட்டு வெளியில் கொண்டுவர ஆக்கள் இருக்கேக்க என்னெண்டாம் உந்த மணல்கொள்ளையை நிப்பாட்டுறது?
(13.02.2024 உதயன் பத்திரிகை)
#eelamnews #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.