(புதியவன்)
அரசுக்கு வர வேண்டிய வருவாய் மற்றும் செலவுகளை கணக்கிடும் பொறுப்பை நிறைவேற்றும் கருவூலக் கணக்குத் துறை (1962) ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. மேலும் கருவூலக் கணக்குத் துறை அரசின் நிதி சார்ந்த பட்டுவாடா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரவு செலவு கணக்குகளை தயார் செய்தல், அரசுப் பணியாளர்களுக்கான ஊதியம் வழங்குதல், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அரசு ஒப்பளிப்பு செய்த தொகையினை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளையும் இத்துறை ஆற்றி வருகிறது.
மேலும், நீதிமன்றம் சார்ந்த மற்றும் நீதிமன்றம் சாராத முத்திரை தாள்கள் மற்றும் முத்திரை வில்லைகளை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முறையாக வழங்கும் பணியை ஆற்றி வருவதோடு, பல துறைகளிலிருந்து பெறப்படும் சேம காப்பு பொருட்கள் ஆகியவற்றை வலுவறையில் வைத்து பாதுகாக்கும் பணி உள்பட பல்வேறு பொறுப்புமிக்க பணிகளுடன் அரசுத் துறைகளால் காப்பறையில் வைப்பீடு செய்யப்படும் விலைமதிப்பு வாய்ந்த மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொருள்களும் இத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இத்துறையின் கீழ் 32 மாவட்ட கருவூலங்கள் மற்றும் 243 சார் கருவூலங்கள் உள்ளன. மக்களை நாடி அரசு என்ற நோக்கத்தின் அடிப்படையில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இக்கருவூலங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்குவது மிகவும் இன்றியமையாததாகிறது.
அந்த வகையில் அதிகரிக்கப்பட்ட அரசு அலுவலகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு கருவூலங்களின் எண்ணிக்கை உயரவில்லை.இதனைக் கருத்தில் கொண்டு ஒரு வருவாய் வட்டத்திற்கு ஒரு சார் கருவூலம் என்ற அடிப்படையில் கருவூல அமைப்பினை சீரமைத்து சார் கருவூலமில்லாத வருவாய் வட்டங்களில் புதிய சார் கருவூலங்களை ஏற்படுத்திட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவெடுத்தது.
"ரசீது / கட்டணம் - ஓய்வூதியம், வைப்பு கணக்கு மற்றும் முத்திரைகள் உள்ளிட்ட பரிவர்த்தனைகள். உளியீடுகள் பதிவு செய்யும் வரை கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பட்டியல்கள் முன்பே சரிபார்க்கப்படுகின்றது, TNTC-70 பதிவேடு பட்டியல்கள் அனுமதிக்கப்படும் வரை கருவூலத்தில் இருக்கும்" என சார்நிலைக் கருவூலம் குறித்து கருவூலக் கணக்குத் துறை இணையதளம் தெரிவிக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில், விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, வேப்பூர் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் என பத்து தாலுக்கா அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில், விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய ஏழு தாலுக்காவிலும், தாலுக்காவாக இல்லாத நெய்வேலியிலும் என எட்டு சார்நிலை கருவூலங்கள் செயல்படுகின்றன. புவனகிரி, வேப்பூர் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் ஆகிய தாலுக்காவில் சார்நிலை கருவூலம் இல்லை.
இந்நிலையில் புவனகிரியில் தாலுகா அலுவலகம் செயல்பட தொடங்கி பத்து ஆண்டுகளை கடந்துள்ளது. அங்கு சார்நிலை கருவூலம் தொடங்க அரசு இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அரசு ஊழியர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது புவனகிரி பகுதியிலுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிதம்பரம் சார்நிலை கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுகின்றனர். முத்திரை தாள்கள், ஸ்டாம்புகள், முக்கிய கோப்புகள், தேர்தலில் பயன்படுத்தப்படும் ஓட்டு இயந்திரம் ஆகியவைகளை பாதுகாக்கும் பணியையும் கருவூலம் செய்கிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அலுவலகம் புவனகிரி தாலுகா அலுவலக வளாகத்திலோ அல்லது நெய்வேலியை முன்மாதிரியாக கொண்டு அதிகமான அரசு அலுவலகங்களை உள்ளடக்கிய பரங்கிப்பேட்டையிலோ அமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பயன்பாடாகவும், ஆவணங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.
"கடலுார் மாவட்டத்தில் புதிய தாலுகாவாக புவனகிரி கடந்த (05.11.2014)ம் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த (12.12.2018) முதல் சொந்தக் கட்டடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புவனகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம் அமைக்க போதிய இட வசதி உள்ளது.
புவனகிரி தாலுகாவில் உள்ள புவனகிரி ஒன்றியம், புவனகிரி பேரூராட்சி, சேத்தியாத்தோப்பு பேரூராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியம், பரங்கிப்பேட்டை பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட கருவூல பட்டியலில் உள்ள 71 அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஓய்வு ஊதியர்கள் அனைவரும் சிதம்பரம் சார்நிலை கருவூலத்திற்கு சென்று அவதியடைகின்றனர். ஓய்வு ஊதியர்கள், அரசு அலுவலர்கள் பணியாளர்களின் நலன் கருதி புவனகிரி தாலுகா அலுவலகத்தில் நடப்பு ஆண்டே சார்நிலை கருவூலம் அமைக்க வேண்டும்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெ., அறிவித்த ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர் ஆகிய தாலுகாவிலும் சார்நிலைக் கருவூலம் அமைக்கப்படவில்லை. அந்த இடங்களிலும் சார் நிலைக் கருவூலம் அமைக்க வேண்டும்" என புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் சட்டமன்றத்தில் கோறிக்கை விடுத்துள்ளதையும் கவனத்தில் கொண்டு எங்களின் கோறிக்கையை விரைவாக நிறைவேற்றித் தருமாறு பொதுமக்களின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.