(ஆதவன்)
இலங்கையின் ஆட்சியாளர்கள் எப்போதும் ஆட்சியை தக்க வைப்பதற்காக ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதே வரலாறு சொல்லும் பாடமாக இருக்கின்றது.
ஜனநாயகத்தின் காவலனாக உலகுக்கு தன்னைக் காட்டிக் ரணில் விக்கிரமசிங்க கூட, அரச தலைவர் பதவிக்குப் பின் கதவால் தெரிவாகிய பின்னர் ஜனநாயகம் - மனித உரிமைகளை தூக்கிக்கடாசி வருகின்றார். அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தலை எதிர்கொள்ளத் திராணியற்ற -முதுகெலும்பில்லாத தலைவரென்பதையே அவரது செயற்பாடுகள் நிரூ பிக்கின்றன.
அரசமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எதிர்வரும் செப்ரெம்பர் -ஒக்ரோபர் மாதங்களுக்குள் அது நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பது சட்ட ஏற்பாடு. அதைச் செய்ய வேண்டியது 'சுயாதீனத்' தேர்தல்கள் ஆணைக்குழு. ஆனால் நிறைவேற்றதிகார அரச தலைவர் முறைமையை ஒழிக்கப்போகின்றேன் என்ற போர்வையில் அரச தலைவர் தேர்தலைப் பிற்போடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க நகர்வுகளை முன்னெடுப்பதாக எதிரணிகள் தொடர்ந்து பரப்புரை செய்கின்றன.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாயின் நிச்சயமாக மக்கள் வாக்கெடுப்பு (சர்வஜன வாக்கெடுப்பு) நடத்தப்பட்டாக வேண்டும். அதை நடத்துவதன் ஊடாக நாட்டு மக்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஆதரவளித்திருக்கின்றனர். அதை ஒழிக்க வேண்டும். புதிய அரசமைப்பைத் தயாரிக்க வேண்டும் என கயிறு விட்டு நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை ஒழிக்கப்படும் அதை அனுபவிக்கத் துடிக்கின்றார் ரணில்.
இதனால் தான் எதிரணிகள் முற்கூட்டியே அபாயச்சங்கை ஊதத் தொடங்கி விட்டன. 'நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்குவோம். ஆனால் அரச தலைவர் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட்ட பின்னர் தான் அது செயற்படுத்தப்பட வேண்டும்' என்பதில் அவை உறுதியாக உள்ளன.
எதிரணிகளின் தொடர்பரப்புரை காரணமாக தனது கபடத்திட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை உணர்ந்த அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எந்தச் சட்டவலுவும் இல்லாத அரச தலைவர் ஊடகப் பிரிவு ஊடாக அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறார். “ஈயம் பூசின மாதிரியும் இருக்கவேணும், ஆனா ஈயமும் பூசக்கூடாது " என்பதைப்போலத்தான் அரச தலைவர் ஊடகப் பிரிவின் இந்த அறிவிப்பு அமைந்திருக்கின்றது.
2024 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தல் உரிய காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நடத்தப்படும் என்றும், 2025ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்நடத்தப்படும் எனவும் பொதுத் தேர்தலுக்கான நிதி அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் எனவும் அந்த ஊடக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது எதிரணிகளின் பரப்புரையை முறியடிக்கவே, இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிவித்ததால் நிச்சயம் தேர்தல் நடக்கும் என்றும் கூற முடியாது. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிவித்தலுக்கு எந்தச் சட்டவலுவும் இல்லை.
அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது கபடத்தனங்கள் அம்பலமாகியமையால் பிறிதொரு வழியால் தேர்தலை ஒத்திவைப்பதற்கான நகர்வுகளை இந் நேரத்துக்குள் திட்டமிட்டிருப்பார். இவை எல்லாவற்றுக்கும் அப்பால் இன்னமும் இரத்துச் செய்யப்படாத உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு தொங்கிக்கொண்டிருக்கின்றது.
நிதி இல்லை என்பதைக் காரணம் காட்டி அதை அந்தரத்தில் தொங்க விட்ட நிதி அமைச்சரான அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் எப்படி அரச தலைவர் தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்?
ஆக மொத்தத்தில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒன்றும் ஜனநாயகத்தின் காவலர் அல்லர். அவரும் ஏனையோரைப்போன்று பதவிப்பித்து பிடித்தவர்தான். அவர் அதிகாரத்துக்கு வராதவரையிலேயே ஜனநாயகத்தின் காவலனாக மிளிர்ந்தார். அதிகாரம் கிடைத்ததும் தனது சுயரூபத்தை, ஆட்சியாளர்களின் பரவணிப்பழக்கத்தை அவரும் காட்டுகிறார். அவ்வளவுதான். ((ஏ)
(16.02.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.