(பட்சி)
முந்தி ஆரும் ஒப்பீஸ் வழியில பிழை விட்டாலோ, வேலையை ஒழுங்காச் செய்யாட்டிக்கோ ' உன்னைத் தண்ணியில்லாக் காட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிப்போடுவன்' எண்டு மேலதிகாரிமார் வெருட்டுறவை. ஆனால் உண்மையிலேயே தண்ணியில்லாத இடமெண்டால் இலங்கையில அது கச்சதீவாத்தான் இருக்க முடியும். அங்க அந்தோனியார் கோயிலும், நேவிக்காம்பும், மரஞ்செடி கொடியளும் தான் இருக்கு. நேவிக்காரருக்கு கூட அங்க வேற இடத்தில இருந்து தான் தண்ணி போறது. இப்பிடி தண்ணியோ, குடிமனையோ இல்லாத ஒரு தீவுக்கு சனங்கள் அந்தோனியாரைக் கும்பிடப் போகேக்க அவைக்கு அதுக்குரிய ஒழுங்குகளைச் செய்து குடுக்க வேண்டியது அரசாங்கத்தின்ர கடமை.
வழக்கமா அந்தோனியாருக்குப் போற இலங்கை ஆக்களுக்கும், இந்தியாவில இருந்து வாறவைக்கும் நேவிக்காரர் தான் சாப்பாடு, தண்ணி குடுக்கிறவை. அதுக்கெண்டு அவைக்குத் தனியா ஒதுக்கீடெல்லாம் இருக்கு. ஆனால் போனமுறை தங்களுக்கு அந்தோனியார் திருவிழாவுக்காக நேவிக்காரருக்கு அரசாங்கத்தால காசு ஒதுக்குப்படேலை. அதால அவை போன வருசம் நடந்த திருவிழாவில ஏனோ தானோ எண்டு தான் சாப்பாடும். தண்ணியும் குடுத்தவை. அதுவும் ஒழுங்கான சாப்பாடில்லை எண்டும், எல்லாருக்கும் கிடைக்கேலை எண்டும் எக்கச்சக்கம் முறைப்பாடு வேற.
அதால இந்தமுறை தாங்கள் தண்ணியோ, சாப்பாடோ தரமாட்டம் எண்டு நேவிக்காரர் கைவிரிச்சுப் போட்டினம். அந்தோனியார் திருவிழா ஒண்டும் நேவிக்காரரின் உபயம் இல்லை தானே. அவை சாப்பாடு, தண்ணி தரமாட்டம் எண்டால், கச்சேரிக்காரரோ. இல்லாட்டி நெடுந்தீவுப் பிரதேச செயலகமோ அதுக்கான ஏற்பாட்டைச் செய்திருக்க வேணுமெல்லோ.
ஆனால் அவையும் நெடுந்தீவு ஏற்பாட்டுக் கூட்டம் எண்ட பேரில என்னென்னவோ எல்லாம் கதைச்சுப் போட்டு கடைசியில 'அங்க போற எல்லாரும் தங்களுக்கு சாப்பாடு, தண்ணி கொண்டு வரோணும், அங்க வந்து சமைக்கவும் அனுமதி இல்லை' எண்டு அறிக்கை விட்டிருக்கினம் உதோ பொறுப்பான அதிகாரிமார் செய்யிற வேலை? அங்க நல்லதண்ணிக் கிணறு இருந்தாலாவது பரவாயில்லை. அதில தண்ணியைக் கிள்ளி சனம் குடிக்கும் எண்டு சொல்லலாம். அப்பிடியுமில்லை. கடல் பயணம் செய்து போட்டு. சுத்திவர உப்புக்காத்து அடிக்கிற இடத்தில ஒருநாள் முழுக்க நிண்டால் வழக்கத்தை விட தண்ணி கூடத்தான் இழுக்கும்.
அதைவிட கச்சதீவுக்குப் போற படகுகளும், யாழ்ப்பாணத்து மினிபஸ்ஸுகள் மாதிரி ஆக்களை அடைஞ்சு கொண்டுதான் போறதுகள். அதுக்க உந்தச் சாப்பாட்டுச் சாமான்களையும், தண்ணி பரல்களையும் எப்பிடிக் கொண்டு போக ஏலும்? அதைவிட நெடுந்தீவில ஒரு சாப்பாட்டுக் கடைதான் வழக்கமா போட அனுமதிக்கிறவை. நேவி சாப்பாடு குடுக்கேக்கையே. அங்க நிக்கிற சனம் அந்த ஒற்றைக்கடையில தள்ளுமுள்ளுப்பட்டுத்தான் சாப்பாட்டை வாங்க முடியும்.
இப்ப நேவியின்ர சாப்பாடும் இல்லையெண்டதால எல்லாச் சனமும் அந்தக் கடையைத்தான் மொய்க்கப்போகுதுகள். சிலவேளை சாப்பாடு வாங்கப்போய் அந்த நெரிசலில சிக்கி, ஆக்களுக்கு பாதிப்பும் வரக்கூடும். இப்பிடி அகதி முகாம் மாதிரி அடிபட்டுச் சாப்பாடு வாங்கித்தானோ அந்தோனியாரைக் கும்பிட வேணும்?
கச்சேரிக்காரரிட்டையோ, நெடுந்தீவுப் பிரதேச செயலகத்திட்டையோ அந்தோனியாரிட்ட வாறவைக்கு சாப்பாடு தண்ணி குடுக்கக் காசில்லாட்டி தனியாரிட்ட யாழ்ப்பாணம் கச்சேரிக்காரர் உதவி கேட்டிருந்தால், அள்ளிக்குடுக்க ஆயிரம் பேர் இருப்பினம். இல்லாட்டி ஆயர் இல்லமாவது ஏதும் செய்திருக்கும். அதை விட்டிட்டு இப்பிடி சனத்திட்ட 'தண்ணியைக் கொண்டுவா. சாப்பாட்டைக் கொண்டு வா எண்டு ஆய்க்கினைப்படுத்திறது அந்தோனியாருக்கே பொறுக்காது கண்டியளோ........
(17.02.2024 உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.