மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் விமர்சித்திருப்பாரா டிலான்?
சு.க. பொதுச் செயலாளர் துமிந்த பதிலடி
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கட்சியின் பொதுச்செயலாளரை விமர்சனம் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை டிலான்பெரேரா நினைத்துப்பார்க்க வேண்டும் எனச் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா, அண்மையில் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
அமைச்சர் டிலான் பெரேரா அண்மையில், துமிந்த திஸாநாயக்கவின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை எனக் கூறியி ருந்தார்.
கட்சியின் பொதுச்செயலாளர் ஒருவரைப் பகிரங்கமாக இவ்வாறு விமர்சனம் செய்வதன் மூலம் டிலான் பெரேரா, தனது அரசியல் அனுபவ முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி யுள்ளார். இதனால் எவருக்கும் எந்தவொரு கருத்தையும் வெளியிட அனுமதியுண்டு.
விமர்சனங்கள் மற்றும் இழிவுபடுத்தல்கள் மூலம் தமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது.
முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமை வகித்த காலத்தில் தேசிய அமைப்பாளரை விமர்சனம் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்- – என்றார்.