நாடாளுமன்றத்தில் மோதுவது மிகவும் மோசமான செயற்பாடு !
பிணைமுறி மோசடி விவகாரத்தை சந்தர்ப்பவாத அரசியலாக்கவேண்டாம் என்கிறார் ஹக்கீம்
பிணைமுறி மோசடி விவகாரத்தை சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிணைமுறி மோசடி விவாதம் நடைபெறாமல், கைகலப்புச் சம்பவம் நடைபெற்றது மிகவும் மோசமான செயற்பாடாகும். இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் ஊழல், மோசடிகள் நடைபெற்றால் அதை மூடிமறைப்பதற்கு எவரும் எத்தனிக்கவேண்டிய அவசியமில்லை. பிணைமுறி விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால், தற்போது நடை முறையிலுள்ள தகவலறியும் சட்டம் மூலம் மக்கள் அதனை தெளிவாக அறிந்துகொள்ளமுடியும்.
பிழையான தகவல்களை வழங்கி மக்களைத் திசைதிருப்புவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. பிணைமுறி முறைகேட்டால் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு ஒரு வீதம் குறைந்துவிட்டதாக பந்துல குணவர்தன கூறுவது பிழையான குற்றச்சாட்டு.
பிணைமுறி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிறுவனத்தின் 10 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இழக்கப்பட்டுள்ள பணம் அரசுக்கே திரும்பிவரும்.
ஒரு நிறுவனம் மோசடி, குற்றச்செயல் மூலம் தவறான முறையில் இலாபம் ஈட்டியிருந்தால், பணத்தை அரசால் சுவீகரிக்க முடியும். பிணைமுறி மூலம் இழந்த பணத்தை அரசால் மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
டொலரொன்றின் பெறுமதி 150 ரூபாவையும் தாண்டியுள்ளதற்கு பிணைமுறி விவகாரமே காரணம் என்று ஒருவர் கூறியதை நான் கேட்டேன். உண்மையில், டொலரொன்றின் பெறுமதி இந்தளவுக்கு செல்லுமென்ற தீர்க்கதரிசனம் 4 வருடங்களுக்கு முன்பே இருந்தது.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரக் கடன் தொகையொன்று, கடன் பெற்றுக்கொண்ட நேரத்தில் அறவிடப்படும் வட்டியின் மதிப்பீட்டுத் தொகை பற்றி பல பொருளாதார நிபுணர்கள் தகவல் வெளியிட்டிருந்தனர். டொலரொன்றின் பெறுமதி 150 ரூபாவையும் தாண்டிச்செல்லும் என்பது தொடர்பாக அன்றிலிருந்தே கூறினார்கள்.
இதுபோன்ற நிலை உருவானது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.
சாதாரண மக்களுக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது. மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை சொல்லிச் சொல்லி, இந்த அரசு பெரிய நிதி மோசடிக்கு ஆளாகியதாகவும், இதனால் நாட்டுக்கு நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும் கிராம மக்கள் மத்தியில் போலிப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிணைமுறி மோசடிகள் நடைபெற்றது என்றாலும், அவை வெளிப்படையானவை. இதற்கு முன்பிருந்த அரசில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. எல்லா கொள்ளையும் பகல்நேரக் கொள்ளையாகவே நடைபெற்றது.
இதன்மூலம் ஒரு சதத்தைக்கூட அரசால் மீளப்பெற முடியவில்லை. எதனையும் நிரூபிக்க முடியாத நிலையில் இந்த பணப் பயன்பாடு நடைபெற்றுள்ளது. முந்திய ஆட்சிக்காலத்தில் எது நடந்தாலும், எவராக இருந்தாலும் தண்டனை வழங்கக்கூடிய நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போதைய நல்லாட்சி அரசு முன்பிருந்த அரசைப்போலன்றி வித்தியாசமான முறையில் முன்னகர்வுகளை மேற்கொண்டுவருகிறது.
கூட்டு அரசு என்ற முறையில் பிரதான இரு கட்சிகளிலும் சில சிரமங்கள் காணப்படுகின்றன. அது இயற்கையான ஒரு விதியாகும். இது அரசியலில் விலக்கமுடி யாத ஒன்றாகும். பிணைமுறி விவகாரத்தைக் காரணம்காட்டி எவரும் குழப்ப நிலயை உருவாக்கவேண்டிய அவசியமில்லை —– என்றார்.