பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை நாடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகள், மத்திய தரைக்கடல் பகுதியில் துனிசியா அருகே பயணித்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்பட்டது. துனிசியா நாட்டின் மஹ்தியா நகர் அருகே நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மோசமான படகு விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். கடலில் விழுந்தவர்களில் பலர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிருடன் மீட்கப்பட்ட அகதிகள், துனிசியாவில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாகவும், அபாயகரமான முறையிலும் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அபாயகரமான பயணங்களின்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அகதிகள் உயிரிழப்பது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.