யாழ்ப்பாணம் – சுண்டிக்குளம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 18 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதன்போது, மீன்பிடி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
பின்னர் குறித்த மீனவர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த மீனவர்களை விடுவிப்பதற்காக இலங்கை அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி கோரியுள்ளார்.
அத்துடன் இந்த விடயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சு உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வி.வைத்தியலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றில் இதனைக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்றையும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் சமர்ப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.