டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்ததில் சுமார்79 பேர்
உயிரிழந்துள்ளதுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாகாண ஆளுநரும் முன்னாள் மேஜர் லீக் பேஸ்பால் வீரருமான ஆக்டேவியோ டோட்டலும் உயிரிழந்தவர்களில் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள அதேவேளை, 51 வயதான டோட்டல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலையில் பிரபல மெரெங்கு பாடகர் ரூபி பெரெஸின் ஜெட் செட் இரவு விடுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில்இடம்பெற்றுள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த இடத்தில் இருந்ததாகவும், மேலும் சுமார் 400 மீட்புப் பணியாளர்கள் இன்னும் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றதாகவும் மேலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்குனர் ஜுவான் மானுவல் மென்டெஸ், இடிந்து விழுந்த கூரையின் கீழ் சிக்கியுள்ளவர்களில் பலர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாகக் தெரிவித்தார்.
ஜெட் செட் என்பது சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியாகும், இதில் வழக்கமாக திங்கட்கிழமை மாலை வேளையில் நடன - இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும் நிலையில் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற முக்கிய நபர்கள் கலந்து கொள்வர்.
பாதிக்கப்பட்டவர்களில் மான்டே கிறிஸ்டி மாகாண ஆளுநர் நெல்சி குரூஸும் ஒருவர் என்று ஜனாதிபதி லூயிஸ் அபினாடர் தெரிவித்தார்.
இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.