ஆதவன்.
படைமுகாமில் துப்பாக்கிச் சூடு நடத்தி இராணுவத்தினர் இருவரைக் கொலை செய்தமை மற்றும் ஒருவருக்குப் படுகாயம் ஏற்படுத்தியமைக்காக இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு இரட்டைத் தூக்குத்தண்டனை மற்றும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது மன்னார் மேல் நீதிமன்றம்.
நேற்று இந்த வழக்குத் தீர்ப்புக்காக எடுக்கப்பட்டபோது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.மொஹமட் மிஹால் இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 2ஆம் திகதி முருங்கன் படை முகாமில் பணியாற்றிய வணசிங்க நிமலசிறி டி சில்வா என்ற படைச்சிப்பாய் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார். மன்னார் நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்ற நிலை
யில் எதிரி மீது இரட்டை ஆள்கொலை மற்றும் ஆபத்தான காயம் விளைவித்தமை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிவான் விளம்பல் கட்டளை வழங்கினார். சட்டமா அதிபர் திணைக்களத்தால் மன்னார் மேல் நீதிமன்றில் குற்றப்பகர்வு பத் திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை மீதான விளக்கம் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இடம்பெற்று வந்த நிலையில் நேற்றுத் தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தது. வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதி அரச சாட்சிகளை நெறிப்படுத்தினார்.
"எதிரி மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் சிவில் சாட்சியங்கள் மற்றும் நிபுணத்துவ சாட்சியங்களின் அடிப் படையில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநரினால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளியாக மன்று தீர்ப்பளிக்கின்றது" என்று மேல் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.