போர் முடிந்த பின்னர், நாட்டின் இராணுவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேசிய போர்வீரர் தினத்தை நினைவுகூரும் வகையில், நேற்று தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போர் முடிவடைந்ததிலிருந்து, கடந்த 16 ஆண்டுகளில் இராணுவத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கூற்றை தம்மால் ஏற்கமுடியாது.
தாம் போரில் ஈடுபட்டிருந்தபோது, இராணுவத்திடம் 80 தாங்கிகள் இருந்தன. போர் முடிவடையும் நேரத்தில், அவற்றில் 50 அழிக்கப்பட்டன. இன்று, இராணுவத்தில் சுமார் 30 தாங்கிகள் மட்டுமே உள்ளன.
இந்தநிலையில், படைப்பிரிவுகளுக்கு தாங்கிகள் தேவை. தனியாக ஆட்கள் இருப்பதும், சில அடிப்படை இராணுவ உபகரணங்கள் இருப்பது மட்டும் போதாது.
அழிக்கப்பட்ட படையினரின் 50 தாங்கிகளுக்குப் பதிலாக, 50 மாற்று தாங்கிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் அவ்வாறான முனைப்புக்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
ஒரு தாங்கியைப் பெற்றுக்கொள்வதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. சிறப்புப் பணிப்படைக்கு ஒரு சிப்பாயைப் பயிற்றுவிக்க இரண்டு ஆண்டுகள் அவசியமாகின்றன.
ஒரு கொமாண்டோவைப் பயிற்றுவிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. எனவே போர் என்பது வானத்திலிருந்து விழும் குண்டுகளுடன் ஆரம்பிக்கக்கூடிய விடயமல்ல.
எனவே எப்போதும், எந்த நேரத்திலும் படையினர் தயார் நிலையிலேயே இருக்கவேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.