இராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1965-ஆம் ஆண்டு இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக இக் கப்பல் சேவை 1981-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கான கப்பல் போக்குவரத்து ஆரம்பமானது.
இக்கப்பல் சேவையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ”ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு, ராமேஸ்வரம் கடற்பகுதியில் நான்கு இடங்களை தேர்வு செய்து தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக நிபுணர்கள் குழு கடலடியில் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் அக்னி தீர்த்த கடற்கரை அருகே 22.15கோடி இலங்கை ரூபாய் மதிப்பில் 119 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகமும், 6 அடி உயரமும் உடைய பயணிகள் இறங்குதளம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் முதற்கட்ட பணியாக நகர்வு மேடை அமைக்கும் பணி இராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நகர்வு மேடைக்கான பாகங்கள் இரண்டு வாரத்திற்குள் பொறுத்தப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை அருகே பயணிகள் இறங்குதளம் அமைய உள்ள பகுதியில் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கரையிலிருந்து கடலுக்குள் கொங்கிரீட் தூண்கள் அமைத்து கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.