அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியின் பெல்வெஹர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் மோதிய விபத்தில் நெதர்லாந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (18) இரவு இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பகுதியில் இருந்து ஹபரணை நோக்கி சென்ற மோட்டார் வாகனம் ஒன்று கடை ஒன்றுக்கு முன்னால் நிறுத்துவதற்காக வீதியின் இடது பக்கமாக திருப்ப முற்பட்ட போது, வீதியின் அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று அந்த மோட்டார் வாகனத்தின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதும், அதே திசையில் சென்ற மற்றொரு முச்சக்கர வண்டி, முன்னால் நடந்த விபத்தை தவிர்க்க முயன்று திடீரென வீதியின் வலது பக்கமாக திரும்பிய போது, எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 4 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 54 வயதுடைய நெதர்லாந்து பெண் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கம்பளை - கண்டி வீதியின் கிரிந்த பகுதியில் புஸ்ஸல்லாவை திசையில் இருந்து கண்டி நோக்கி சென்ற மோட்டார் வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
கம்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.