இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகூவின் வீட்டை இலக்கு வைத்து லெபனானிலிருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் வடக்கு பகுதியிலுள்ள Caesarea, பகுதியில் பிரதமரின் இல்லம் அமைந்துள்ளது. தாக்குதலின் போது பிரதமர் மற்றும் அவரது பாரியார் வீட்டில் இருக்கவில்லையென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் வீட்டின் அருகில் ட்ரோன் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. லெபனானிலிருந்து ஏவப்பட்ட மேலும் இரு ட்ரோன்கள் டெல் அவிவ் பகுதியில் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டமைக்கு பதிலடி வழங்கப்படுமென ஹமாஸ் தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியாக இருந்தவர் இந்த யஹ்யா சின்வார் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
ஹமாஸ் தலைவரின் இழப்பு, அந்த அமைப்பை வலுவிழக்கச் செய்யுமென இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதல்கள் தொடருமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் பிராந்திய கட்டளையிடும் நிலைமெயான்றும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் இஸ்ரேலின் ஹாபியா நகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல் நடத்தியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.