ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டே, உள்ளூராட்சித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தவுள்ளது என்று சட்டத்தரணியும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் மேயருமான வி.மணிவண்ணன் விமர்சித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான, மேன்முறையீடு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, சட்டத்தரணி வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ், மாநகரசபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பெண் வேட்பாளர் ஒருவரின் சத்தியப்பிரமாணத்தில், சத்தியப்பிரமான ஆணையாளரின் ஒப்பம் இல்லை, இளம் வேட்பாளர்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்பத்தாட்சிப் பத்திரங்களில் அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தரின் ஒப்பம் இல்லை உள்ளிட்ட காரணங்களுக்காகவே எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆனால், எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு கூறப்பட்ட அதே காரணங்களுக்காக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வேறு தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பில், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, நீதிமன்றத்தின் அந்தக் கட்டளையைக் காரணமாகக் காட்டி, எமது வேட்புமனுக்களையும் ஏற்றுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரினோம்.
எனினும், 'நீதிமன்றக் கட்டளை உள்ள வேட்புமனுக்களையே ஏற்றுக்கொள்வோம். நீங்கள் 20ஆம் திகதிக்கு முன்னர் வழக்கு தொடருங்கள்' என அறிவுறுத்தினார்கள். அதன் பிரகாரம் நாம் கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம்.
குறித்த வழக்கு நேற்றுத் திங்கட்கிழமை (நேற்றுமுன்தினம்) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, காலதாமதம் எனக் காரணம்கூறி தேர்தல் ஆணைக்குழு மன்றில் எமது மனுக்களை விசாரணைக்கு எடுக்க ஆட்சேபனை தெரிவித்தமையால் எமது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஒரு காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கினால், அதே காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடப்பாடு. நீதிமன்றக் கட்டளைகள் இருந்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் எனக்கூறி, எம்மை வழக்குத் தொடருமாறு அறிவுறுத்திய பின்னர், நாம் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த நிலையில் காலதாமதம் என கூறியுள்ளார்கள்.
இதனூடாக ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி, அதனைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தவுள்ளது. இங்கே தேர்தல் ஆணைக்குழு, நீதியாக, நேர்மையாக, ஜனநாயக ரீதியாக சுயாதீனமாக செயற்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடு, ஜே.பி.வியின் காட்டாட்சியை எடுத்துக்காட்டுகின்றது – என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.