விடுவித்த காணிக்குள் பிரவேசிக்கத் தடை!
(ஆதவன்)
யாழ்ப்பாணம்- தெல்லிப்பழை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டுள்ளஇடங்களில் சுமார் 55 ஆயிரம் சதுர அடிகாணியில் கண்ணிவெடிகள் காணப்படக்கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தால் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லவேண்டாம் என காணி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்போது கண்ணிவெடிகள் காணப்படும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டால் அந்த இடங்களைத் தவிர்த்து ஏனைய காணிகளுக்குள் எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் பொதுமக்கள் தங்களின் மீள்குடியேற்றச் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்ணிவெடிகள் காணப்படும் பட்சத்தில் அவற்றை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி செயலிழக்கச் செய்யப்பட்டு அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன் பின்னர் அவ்விடங்கள் கண்ணிவெடி அற்ற பிரதேசமாக அறிவித்தல் விடுக்கப்பட்டதும் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி தங்களின் காணிகளுக்குள் செல்லமுடியும்.
வசாவிளான் கிழக்கு (ஜே/ 244), வசாவிளான் மேற்கு (ஜே/ 245), பலாலி வடக்கு (ஜே/ 254), பலாலி கிழக்கு (ஜே/ 253), பலாலி தெற்கு (ஜே/ 252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.83 ஏக்கர் காணிகள் விவசாய நடவடிக்கையின் நிமித்தம் அண்மையில் விடுவிக்கப்பட்டன. இந்தக் காணிகளுக்குள் பிரவேசிக்கவே தற்போது தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.