(ஆதவன்)
இந்திய மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தலைமை அமைச்சர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக எதிர்வரும் 8ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
543 தொகுதிகளைக் கொண்ட இந்திய மக்களவைத் தேர்தலில் 273 தொகுதி என்ற பெரும்பான்மையை எந்தக் கட்சி வெளிப்படுத்துகின்றதோ அந்தக் கட்சியே ஆட்சியமைக்கும்.
நேற்றுமுன்தினம் வெளியான முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிட்டவில்லை. பா.ஜ.க.வால் 240 தொகுதிகளிலேயே வெற்றிபெற முடிந்த நிலையில், கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதை பா.ஜ.க. உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று மதியம் சந்தித்த மோடி, 17ஆவது மக்களவையைக் கலைக்கும் முடிவையும், தனது பதவி துறப்பு தீர்மானத்தையும் (மீண்டும் தலைமை அமைச்சராகுவதற்காக) குடியரசுத் தலைவரிடம் கையளித்தார். அவற்றை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். புதிய அரசு அமையும் வரையில் மோடியை காபந்து தலைமை அமைச்சராகச் செயற்படும் படியும் முர்மு கேட்டுக்கொண்டார். அதை மோடியும் ஏற்றுக்கொண்டார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.