காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிவழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் கூறுகின்ற போதிலும், அவர்கள் எம்மிடம் ஒருவாறாகவும், சர்வதேசத்திடம் ஒருவாறாகவும் நடந்துகொள்கின்றனர் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது? என்பதை வெளிப்படுத்துமாறுகோரி கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் நேற்றுப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே, ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
படையினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுக் காணாமலாக்கப்பட்டவர்களையும், காணாமலாக்கப்பட்ட உறவுகளையும் நாங்கள் மிக நீண்டநாள்களாகத் தேடி வருகின்றோம். கிட்டத்தட்ட மூவாயிரமாவது நாளை எமது போராட்டம் அண்மித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், எமக்குரிய பதில் இன்னமும் வழங்கப்படவில்லை.
கடந்த அரசாங்கங்களைப் போன்று செயற்பட மாட்டோம் என்றும், காணாமலாக்கப்பட்டோரின் விடயத்துக்கு நீதி வழங்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தியினர் எம்மிடத்தில் தெரிவித்தனர்.
ஆனால், சர்வதேசத்துக்கான அவர்களின் பதில் வேறு மாதிரியாக உள்ளது. எமக்கு ஒரு முகத்தையும், சர்வதேசத்துக்கு இன்னொரு முகத்தையும் காண்பித்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் மிகத்தவறான ஒரு அணுகுமுறையை தற்போதைய அரசாங்கத்தினர் பின்பற்றி வருகின்றனர். எமக்கு ஏமாற்றமே மிச்சமாகியுள்ளது – என்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.