(ஆதவன்)
பிரபல்யமான நிறுவனமொன்றின் காலணிகளில் கார்த்திகைப் பூ அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளமைக்கு, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரான பொ.ஐங்கரநேசன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்த காலணிகளை சந்தையில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்றும் இது தொடர்பாக தமிழ் மக்களிடம் அந்த நிறுவனம் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஐங்கரநேசன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-
கார்த்திகைப் பூ வெறும் பூ அல்ல. தமிழ் மக்களின் வாழ்வியலிலும் உணர்வுகளிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் இரண்டறக்கலந்துள்ள அவர்களின் உயிர்ப்பூ. இது தென்னிலங்கை நிறுவனமான குறித்த காலணி உற்பத்தி நிறுவனத்துக்குத் தெரியாததல்ல. ஆனாலும், தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் விதத்தில் இந்நிறுவனம் தனது இலேசுரக காற்செருப்புகளில் கார்த்திகைப் பூவைப் பொறித்து விற்பனைக்கு விட்டுள்ளது. இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குறித்த நிறுவனம் கார்த்திகைப்பூ பொறிக்கப்பட்ட காற்செருப்புகளை விற்பனையில் இருந்து மீளப் பெறல்வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுக ளைக் காயப்படுத்தியமைக்காக வருத்தமும் தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் புத்தபெருமானின் உருவத்தை உடலில் பச்சை குத்தியவர்களும், பௌத்த சின்னங்கள் அச்சிட்ட ஆடைகளை அணிந்தவர்களும் பௌத்தத்தை அவமதித்ததாக, பௌத்த மதத்தினரின் மனதைப் புண்படுத்தியதாகக் கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கார்த்தி கைப்பூவும் புனிதமான ஒன்றாக, அவர்களின் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதனால் கார்த்திகைப்பூவைக் காற்செருப்பில் பொறித்திருப்பதைத் தங்களை இழிவுபடுத்தும் ஒன்றாகவே தமிழர்கள் கருதுகின்றனர் - என்றுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.