(புதியவன்)
மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில் வயல் வெளியில் உள்ள கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மண்டூர் கோட்டமுனையைச் சேர்ந்த 69 வயதுடைய தம்பிராசா பதிராசா என்ற மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் அமைந்துள்ள வயலில் உள்ள கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ரஞ்ஜித்குமார் முன்னிலையில் கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை பார்வையிட்ட நீதிவான் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்குக்கு கொண்டு சென்று உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
உயிரிழந்தவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்டவர் திங்கட்கிழமை மாலை வரை வீடு வந்து சேரவில்லை என உறவினர்கள் தெரிவித்ததோடு பொலிஸாரிடமும் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.