அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதை
நிராகரிக்க மறுத்ததன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் அதன் இறையாண்மை எல்லைகளை தாக்குவதற்கு ஏனைய நாடுகளை அனுமதிக்காது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் டேனிஷ் பிரதேசத்தைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன் இது தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும் கூறினார்.
அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடான டென்மார்க், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்றும் குடிமக்களுக்கு சொந்தமானது
என்றும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
கிரீன்லாந்தையோ அல்லது பனாமா கால்வாயையோ கையகப்படுத்துவதற்கு இராணுவம் அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவதை நிராகரிப்பீர்களா என செய்தியாளர்கள் மாநாட்டில் ட்ரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, பொருளாதார பாதுகாப்பிற்கு எங்களுக்கு அவை தேவை என்று கூறிய ட்ரம்ப் சீன மற்றும் ரஷ்ய கப்பல்களைக் கண்காணிப்பதற்கான இராணுவ முயற்சிகளுக்கு தீவு முக்கியமானது என்றும் கூறினார்.
கிரீன்லாந்து பனிப்போருக்குப் பின்னர் அமெரிக்க ரேடார் தளத்தின் தாயகமாக இருந்து வருவதுடன் வோஷிங்டனுக்கு நீண்ட காலமாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கிரீன்லாந்து கிரீன்லாண்டர்களுக்கு சொந்தமானது என டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்களால் மட்டுமே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.