கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்? என்ற விடயம் நேற்றுச் சர்ச்சையாகியுள்ளது. மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன்பாக நேற்றுப் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த 2016ஆம் ஆண்டுமுதல் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்பது வருடங்களாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக துயிலுமில்ல நிர்வகிப்புத் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.
மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம் எனும் அமைப்பு மாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததுடன், கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நிர்வாகத் தெரிவை நேற்று நடத்துவதற்கும் அழைப்பு விடுத்திருந்தது.
நிர்வாகத் தெரிவுக்காக அங்கு சென்றவர்களுக்குடன் வேறுசிலர் முரண்பட்டுள்ளனர். புதிய நிர்வாகத் தெரிவு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் எழவில்லை என்றும், தற்போது உள்ள நிர்வாகமே தொடர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்தே இரு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அமைதியின்மை உருவாகியுள்ளது.
மாவீரர் துயிலுமில்லங்களை அரசியல் மயப்படுத்தி, முன்னாள் போராளிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்படுத்துவது தொடர்பில் பலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்தக் குழப்பங்களுக்குள் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சிநிரல் உள்ளது என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.