இந்தியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ரி-20 கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஏற்கனவே தகுதிபெற்றிருந்த இலங்கை மாஸ்டர்ஸ் அணி, தனது கடைசி லீக் போட்டியில் குமார் சங்கக்கார குவித்த சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை 9 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 12.5 பந்துப்பரிமாற்றங்களில் ஒரு இலக்கை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களைக் குவித்து மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த மொத்த எண்ணிக்கையில் 70 வீதத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குமார் சங்கங்கார தனி ஒருவராகப் பெற்றுக்கொடுத்தார்.
அதன்படி, 47 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 19 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் உட்பட 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் பில் மஸ்டர்ட் 50 ஓட்டங்களையும் டிம் ப்ரெஸ்னன் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இசுறு உதான, டில்ருவன் பெரேரா, அசேல குணரட்ன, சத்துரங்க டி சில்வா மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு இலக்கினைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.