சாவகச்சேரி மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாவகச்சேரி மருத்துவமனையில் பணியாற்றிவந்த சிறுநீரக சுத்திகரிப்பு தொடர்பான மருத்துவர் இடமாற்றலாகிச் சென்றுள்ளார். பதில் மருத்துவர் பொறுப்பேற்காத நிலையில் இடமாற்றத்தின் அடிப்படையில் அவரை விடுவிப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்திருந்தது. எனினும், அந்த மருத்துவர் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்று மாற்றலாகிச் சென்றுள்ளார். அத்துடன், ஏற்கனவே சில மருத்துவர்களுக்கும் அங்கு பற்றாக்குறை நிலவிய நிலையில் தற்போது சாவகச்சேரி மருத்துவமனையில் நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சாவகச்சேரி மருத்துவமனை தொடர்பில் முன்வைக்கப்பட்ட விரும்பத்தகாத குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே மருத்துவர்கள் அங்கு பணியில் ஈடுபடுவதற்கு முன்வருவதில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து சாவகச்சேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவேண்டிய மூன்று மருத்துவர்கள் இன்னமும் தங்களின் கடமைகளை அங்கு பொறுப்பேற்கவில்லை. ஆதலால், மருத்துவமனையின் கிளினிக் பிரிவிலும், வெளிநோயாளர் பிரிவிலும் கடந்த சில தினங்களாக நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தே சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.