தங்கத்தை உடலில் மறைத்து வைத்து கடத்துவது எப்படி என்பதை யூடியூப் பார்த்து கற்றுக் கொண்டேன் என நடிகை ரன்யா ராவ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட நடிகை ரன்யா ராவ் சமீபத்தில் டுபாயிலிருந்து பெங்களூருக்கு வந்தபோது, 12 கோடி மதிப்புள்ள நகைகளை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், "மார்ச் 1ஆம் திகதி, வெளிநாட்டு தொலைபேசியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. டுபாய் விமான நிலையத்தில் தங்கத்தை சேகரித்து, பெங்களூரில் டெலிவரி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதுதான் நான் தங்கம் கடத்தியது முதல் முறை. இதற்கு முன்பு, நான் தங்கத்தை கடத்தியதோ வாங்கியதோ இல்லை.
தங்கத்தை மறைத்து வைத்து கடத்துவது எப்படி என்பதை யூடியூபில் பார்த்து கற்றுக்கொண்டேன். விமான நிலையத்திலிருந்து பேண்டேஜ்கள் மற்றும் கத்தரிக்கோல் வாங்கி, கழிப்பறையில் தங்கக் கட்டிகளை என் உடலில் மறைத்து வைத்தேன். பின்னர், பேண்டேஜ்களை வைத்து மூடினேன்.
என்னை தொலைபேசியில் அழைத்தவர் யார் என்பது எனக்குத் தெரியாது. என்னிடம் தங்கத்தை ஒப்படைத்த நபரும் உடனடியாக வெளியேறிவிட்டார். அவரை இதற்கு முன்பு சந்தித்ததுமில்லை.
நான் டுபாய்க்கு அடிக்கடி புகைப்படம் எடுக்கவும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் பயணம் செய்தேன். அதேபோல், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளேன்," என்று கூறியுள்ளார். இதனை அடுத்து, அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.