இந்தியாவின் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், தனக்குத்தானே வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொண்டதால் தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாய்க்கால்பட்டறையில் தச்சுத்தொழிலாளியான தமிழ்ச்செல்வன் - ஜோதி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஏற்கனவே, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். 4 ஆவது முறையாக கர்ப்பம் தரித்த ஜோதி, அண்மையில் அவரது தாய் வீட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது.
7 மாதம் ஆனபிறகுதான் ஜோதி தாய்மை அடைந்திருந்தது அவரது கணவர் தமிழ்ச்செல்வனுக்கு தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஜோதியின் பெற்றோருக்கு தனது மகள் கருவுற்றிருக்கிறாள் என்பது தெரியாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் இருந்த ஜோதிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. பிறந்த பெண் குழந்தை இறந்த நிலையில், அதனை வீட்டின் பீரோவுக்கு அடியில் மறைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜோதியின் பெற்றோர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போதுதான், தனது மகளுக்கு பிரசவத்தின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கு என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். குழந்தை எங்கே என்று தேடிப் பார்த்த போது பீரோவிற்கு அடியில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக பெண்ணின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.