லலீசன் ஆதங்கம்!
(ஆதவன்)
மருத்துவக் கற்கையிலும், முகாமைத்துவக் கற்கையிலும், கல்வியியல் துறைகளிலும் போதிக்கப்படவேண்டிய திருக்குறள் தமிழ் மற்றும் சைவ சமயப் பாடங்களுக்குள் குறுக்கப்பட்டுள்ளது என்று ஆதங்கம் வெளியிட்டுள்ளார் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச. லலீசன்.
குணராஜா நக்கீரன் எழுதிய 'திருக்குறளும் சுகநலமும்' எனும் நூல் வெளியீட்டு விழா யாழ். இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
திருக்குறள் தொடர்பான பார்வையைத் தற்போது பலரும் பல்வேறு கண்ணோட்டத்தில் செலுத்துகிறார்கள். திருக்குறளும் மருத்துவமும், திருக்குறளும் முகாமைத்துவமும், திருக்குறளும் கல்வியும், திருக்குறளும் விவசாயமும் என்று ஒப்பீட்டு ரீதியில் திருக்குறளைப் பார்க்கின்றனர். திருக்குறளில் தங்கள் துறை சார்ந்த செய்திகள் எவ்வாறெல்லாம் சொல்லப்பட்டுள்ளன என்பதைத் தேடுபவர்களின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது. யாழ். மண்ணும் இதற்குச் சற்றும் தளைத்ததில்லை. ஈழத்தவர்கள் திருக்குறள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். கடந்த நூற்றாண்டில் கோப்பாயைச் சேர்ந்த வேலுப்பிள்ளை திருக்குறளுக்கென உரை வகுத்தார். அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை எங்கள் ஈழதேசம் திருக்குறள் பற்றிய உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. திருக்குறளில் பேசப்படாத விடயங்கள் எதுவுமே இல்லை.
திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் வாழ்வின் மேன்மைக்குரிய கருத்துகளாக எண்ணிக் கைக்கொள்ள வேண்டும் - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.