(மாதவன்)
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்படவேண்டும் என்ற கொள்கையுடன் யாழ்ப்பாண வர்த்தக சங்கமும் இணங்குவதாக சிவில்சமூக அமைப்புக்களின் கூட்டிணைவு தெரிவித்துள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பாக மக்கள் சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக யாழ்;ப்பாண வர்த்தக சங்கத்துடன் கலந்துரையாடலை சமூக அமைப்புகளின் கூட்டிணைவு நேற்று மாலை முன்னெடுத்திருந்தது.
சந்திப்பின் ஆரம்பத்திலேயே பொதுவேட்பாளரின் அவசியத்தை முன்னிறுத்தி அது விரைவாகவும் வீரியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை வர்த்தக சங்கத்தினர் முன்வைத்திருக்கின்றனர். இது பொதுவேட்பாளர் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும் சமூக நிறுவனங்கள் மத்தியிலும் தன்னியல்பாக தோன்றியுள்ளமையின் வெளிப்பாடு என சந்திப்பில் கலந்து கொண்ட சமூக அமைப்புக்களின் கூட்டிணைவின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இச்சந்திப்பில் பொதுவேட்பாளர் முன்னெடுப்பில் தொடர்ச்சியாக இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைவில் யாழ். வர்த்தக சங்கமும் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான தமது நிலைப்பாட்டை ஊடக அறிக்கையூடாக வெளியிடவுள்ளதாக யாழ். வர்த்தக சங்கம் தெரிவித்ததாக, சமூக அமைப்புக்களின் கூட்டிணைவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். (அ-க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.