கோவையில் உதவி காவல் ஆணையராக இருக்கிறார் அரவிந்த் (விதார்த்). ஒருநாள் இரவில் ரெயின்கோட் அணிந்த மனிதர், சைக்கோத்தனமாக சாலையில் எதிர்படுபவர்களை எல்லாம் கொடூரமாகத் தாக்குகிறார். அவரைப் பிடிக்கச் சென்ற பொலிஸ்காரர்களும் தாக்கப்படுகிறார்கள்.
அரவிந்த், அவரை பிடிக்க அதிரடியாகக் களமிறங்குகிறார். அவரால் ரெயின்கோட் மனிதரை பிடிக்க முடிந்ததா? அவர் யார், ஏன் அப்படி செய்தார்? என்பது மீதி கதை.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கதைக்குள் இழுத்துவிடுகிறார் அறிமுக இயக்குநர் சாஜி சலீம். ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அனைத்து குணநலன்களும் இந்த படத்திலும் இருக்கின்றன. இதனால், அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது படம். இதெல்லாம் அந்த ட்விஸ்ட் வரும் வரைதான். அதற்கு எம்.எஸ்.பிரவீனின் பின்னணி இசையும் இரவு நேர கோவையின் அழகையும் கார் சேஸிங்கையும் டிரோன்களில் காட்டும் ஞானசவுந்தரின் ஒளிப்பதிவும் கச்சிதமாகக் கை கொடுத்திருக்கின்றன.
தாக்குதலை நடத்தும் ரெயின்கோட்காரர் யார் என்பது தெரிந்த பிறகு திரைக்கதையின் சுவாரஸ்யம் மொத்தமாக இறங்கிவிடுகிறது. அவர் சைக்கோ ஆனதற்கான காரணம் அழுத்தமாகச் சொல்லப்படாததால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கிளைமாக்ஸும் அப்படியே. பின்கதையை சொல்லும் இடங்களை எடிட்டர் பரத் விக்ரமன் இன்னும் குறைத்திருக்கலாம்.
கதாபாத்திர வடிவமைப்பும் அவர்களுக்கான பலவீனமான எழுத்தும் யூகிக்கக் கூடியதாகவே இருக்கின்றன. அமைதியான பொலிஸ் அதிகாரி அரவிந்தாக, விதார்த் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மஞ்சுவாக வரும் சஹானாவுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம். அவர் கணவர் விபின், அரவிந்த் மனைவியாக ஸ்வேதா டோரத்தி, மருத்துவர் கஜராஜ், பசுபதிராஜ் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இரண்டாம் பாதி திரைக்கதையிலும் படமாக்கத்திலும் இன்னும் மெனக் கெட்டிருந்தால் நல்ல த்ரில்லர் படமாகி இருக்கும். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.