நயினாதீவு நாகபூஷணி ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
நயினாதீவு நாகபூஷணி ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (17) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்; நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி  அம்மன் கோவில் உயர் திருவிழா எதிர்வரும் 2025.06.26 ஆம் திகதி தொடக்கம் 2025.07.11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.       

இக் கலந்துரையாடலில்  பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்து எனத் தீர்மானிக்கப்பட்டது.

1.நயினாதீவில் மூழ்கிய கடற்பாதையினால் ஏற்பட்டுள்ள கடற் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள இடையூறை தவிர்ப்பதற்காக ஒரு பகுதியை கடற்படையின் ஒத்துழைப்புடன் அகற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

2.குடிநீர் தேவைப்பாடுகள் - ஆலயத்திற்குவரும் பக்தர்கள், அமுதசுரபி மண்டபம் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கான தேவையான அளவு குடிநீர்களை சீராக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை சீராக வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

3.பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் - அதாவது சப்பறத் திருவிழா வரை 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், சப்பறம், தேர், தீர்த்தம்  மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.       

4.பக்த்தர்கள் அணிந்துவரும் நகைகளுக்கு அவர்களே பொறுப்பு என அறக்காவலர் சபையால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

5.ஆலயத்திற்கு அருகிலுள்ள  வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் வீதியினை நிரந்திமாக புனரமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீர் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

6.சாரணர்களின் சேவைகளைபெற்றுக்கொள்ளவது தொடர்பாகவும் முதல் தடவையாக தீவகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாரணர்களின் சேவைகள் பெற்றுக்கொள்ளுதல்  மற்றும் அவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்துச் சபையூடாக மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

7.திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் விசேட திருவிழாவான சப்பறம், தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் காலை 4.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் எனவும் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கும் சேவை இடம் பெறவும் ஒழுங்கு செய்யப்பட்டது. 

8.குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. 

9.திருவிழா காலங்களில் நயினாதீவு கிராமங்களில்திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடமாடும் சேவையினை ஈடுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

10.யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் அங்கு கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

11.குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

12.ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேறு பொருத்தமான இடத்தில் மாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

13.நயினாதீவுக்கு 24.06.2025 ஆம் திகதி முதல் 12.07.2025 ஆம் திகதி வரை கட்டடப்பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது முற்றாக தடைசெய்வது எனவும், தொடர்ந்து எதிர்காலத்தில் கட்டடப் பொருட்களை நயினாதீவு வங்களாவடி துறைமுகத்தின் ஊடாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள ம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைய, படகுச் சங்கம், ஆலய அறக்காவலர் சபையினர் மற்றும் பொது அமைப்புகள் ஆய்வு செய்து இறுதி தீர்மானம் எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

14.நயினாதீவில் மதுபான விற்பனையினை மதுவரித்திணைக்களம் நடமாடும் சேவையூடாக கண்காணிப்பது எனவும், விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

15.பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

16.அமுதசுரபி அன்னதான சபையினால் மதிய உணவு இரவு உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.              

17.மேலும், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை,  அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. 

இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் (காணி) க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் சிவகரன், சுகாதார மருத்துவ அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

139 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.