(மாதவன்)
பருத்தித்துறை - துன்னாலையில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை இன்று காலை உயிருடன் மீட்டுள்ளனர்.
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவிலில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு பின் பொலிஸார் இந்த சட்டவிரோத கொல்களத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந் நடவடிக்கையின் போது சாவகச்சேரி- மட்டுவிலில் திருடப்பட்ட ஒரு மாட்டினை பொலிஸார் மீட்டதுடன் மட்டுவிலில் திருடப்பட்ட ஏனைய மாடுகள் இறைச்சியாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுவதோடு ஏனைய இரண்டு மாடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் வைத்து பராமராக்கப்பட்டு வருகின்றது.
இந்த சுற்றிவளைப்பின் போது மூன்று பசு மாடுகள் மீட்கப்பட்டதுடன் பசு மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றுடன் பிரதான சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.