ஐ.பி.எல். தொடரின் 37 ஆவது லீக் ஆட்டத்தில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது.
இந்த ஆட்டம் நேற்று பஞ்சாபின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங்க சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணி சார்பாக பிரப்சிம்ரன் சிங் 33 ஓட்டங்களையும், ஷஷாங்க் சிங் 31 ஓட்டங்களையும், ஜோஷ் இன்கில் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
பெங்களூர் அணி சார்பாகப் பந்துவீச்சில் குருனல் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ரொமாரியோ ஷெப்பர்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
158 என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய பெங்களூர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிலிப் சால்ட் ஒரு ஓட்டம் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார். ஆயினும் அதன்பின்னர் விராட் ஹோக்லி மற்றும் தேவ்தத் படிக்கல் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியது. இருவரும் 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.
தேவ்தத் படிக்கல் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். விராட் ஹோலி ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களைப் பெற்றார், ராஜத் பட்டித்தார் 12 ஓட்டங்களும், ஜிதேஷ் சர்மா 11 ஓட்டங்களும் எடுத்தனர். 18.5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் பெங்களூர் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்கள் பெற்று வெற்றியீட்டியது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.