மல்லன்பூர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஐ.பி .எல். ஆட்டத்தில் பஞ்சாப் பின் ஆரம்ப வீரர் பிரியன்ஸின் அபாரமான ஆட்டத்தால், சென்னை சுப்பர் கிங்ஸ் படுதோல்வியடைந்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
பிரியன்ஸ் ஒருமுனையில் ஆட்டமிழக்காது நின்றாலும், மறுமுனையால் விக்கெட்டுக்கள் சரிந்த வண்ணம் இருந்தன. பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயஸ் ஐயர், ஸ்ரொய்னிஸ், மக்ஸ்வெல், நிஹால் வதேரா அடுத்தடுத்து ஒற்றையிலக்கங்களுடன் ஆட்டமிழந்தனர்.
ஆனால், பஞ்சாப்பின் இன்னிங்ஸில் பதற்றம் இல்லை. பிரியன்ஸ் வாண வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார். அவரின் பிடியெடுப்புகளும் தவறவிடப்பட சென்னை அணிக்குப் பேரிடிகள் மாறிமாறி விழுந்தன. 39 பந்துகளில் சதம் கடந்தார் பிரியன்ஸ், 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஷசாங் சிங், மார்கோ ஜான்சன் இருவரும் கடைசிக் கட்ட அதிரடியைக் காட்ட பஞ்சாப் அணி 6 இலக்குகளை இழந்து 219 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்குக் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்ப வீரர் ரச்சின் ரவீந்திரா, கொன்வே இருவரும் இலக்கை எட்டும் படியான ஆரம்பத்தை வழங்கினார்கள். அணி 61 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார் ரச்சின். அணித் தலைவர் ஹெய்க்வாட் ஓர் ஓட்டத்துடன் பவிலியன் திரும்பினார்.
கொன்வே 69 ஓட்டங்களைப் பெற்றாலும், இதற்காக அவர் 49 பந்துகளை எதிர்கொண்டார். டோனி கடைசிக் கட்டத்தில் அதிரடிகாட்ட எத்தனித்தார். ஆனால், அதற்குள் அனைத்தும் கடந்திருந்தது. முடிவில் 5 இலக்குகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்ற சென்னையை 18 ஓட்டங்களால் வென்றது பஞ்சாப் அணி.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.