'அற்றகுளத்து அறுநீர்ப்பறவை' எண்ட சொல்லைக் கேள்விப்பட்டிருப்பியள். மூதுரையில ஒளவையார் "தண்ணியில்லாத குளத்தை விட்டிட்டு வேற குளத்துக்கு போற பறவையள் எண்டு வடிவாச் சொல்லியிருப்பா. எப்பவும் பவரும். பணமும் இருந்தாத்தான் பக்கத்தில நாலைஞ்சு பேர் ஒட்டிக்கொண்டிருப்பினம். இல்லாட்டி எல்லாரும் ஓடிடுவினம், ஆனால் சில இடங்களில் இதுக்கு எதிர்மாறாவும் நடக்கும். பவரும், பணமும் இருந்தாலும் கூட ஏனெண்டும் கேக்காத அளவுக்கும் சிலர் இருக்கினம். சிலவேளை அவையள் செய்த முன்வினையளின்ர கர்மத்தால அப்பிடி ஆக்கள் அண்டுகினம் இல்லைப்போல. சரி நீட்டி முழக்காமல் விசயத்துக்கு வருவம்.
இந்தமுறை மேதினத்தை வடமராட்சியில வீணைக்கட்சி நடத்தினது. அங்கையுள்ள கடற்றொழில் அமைப்புகளெல்லாம் தங்கட கட்டுப்பாட்டுக்க இருக்கெண்டு நினைச்சுத்தான் பெருமெடுப்பில அங்க மேதினக் கூட்டத்தை வைப்பம் எண்டு முடிவெடுத்தவையாம். ஆனால், நானூறு. ஐநூறு பேர் வருவினம் எண்டு நினைச்ச கூட்டத்துக்கு நாலைஞ்சு பேர்தான் வந்திருக்கினம். எந்தெந்தச்சங்கமெல்லாம் தங்கட முழுக்கட்டுப்பாட்டுக்க இருக்கெண்டு வீணைக்காரர் கணக்குப் போட்டிச் சினமோ, அந்தச் சங்கங்களில இருந்து ஒருத்தர் கூட வரேலை எண்டதுதான் கடும்பகிடியாம். அடுத்தநாள் எல்லாச் சங்கங்களுக்கும் வீணைக் காரர் போன் பண்ணி, கூட்டத்துக்கு ஏன் வரேலை எண்டு கேட்டிருக்கினம். அதுக்கு "அண்டைக்கு தொழிலுக்குப் போற நாள், தொழிலை விட்டிட்டு தொழிலாளர் தினத்துக்கு வந்தால் குடும்பத்துக்கு ஆர் காசு குடுப்பினம்?" எண்டு திருப்பி அந்தக் கடற்றொழில் சங்கக்காரர் கேட்டிருக்கினம். வீணைக் காரரால பதில் சொல்லேலாமல் போட்டுது.
முந்தநாள் பருத்தித்துறையில இருக்கிற ஒரு மண்டபத்தில வீணைக்கார அமைச்சர், அதே கடற்றொழில் சங்கக்காரர், ஆதரவாளர்களைக் கூப்பிட்டுக் கூட்டமொண்டு வைச்சிருக்கிறார். வரப் போற ஜனாதிபதித் தேர்தலில ரணிலை ஆதரிக்கோணும் எண்டு அவைக்கு அமைச்சர் விளங்கப்படுத்தத்தான் அந்தக் கூட்டமாம். ஆனால் மேதினத்துக்கு வராத ஆக்களெல்லாம் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கினம். அண்டைக்கு ஒரு ஈ, காக்கா கூட வரேலை. இந்தமுறை மட்டுமெப்பிடி இப்பிடிச் சனம் வந்தது? எண்டு வீணைக்காரரே தங்கட நெருங்கின வட்டங்களுக்குச் சொல்லி இருக்கினம்.
"அண்டைக்கு அவை தொழிலுக்குப் போன தாலதான் வரேலை எண்டவை. அதால இண்டைக்கு அமைச்சரோட சந்திப்பு இருக்கெண்டு தொழிலுக்குப் போகாமல் 'தொழில் மறிப்பு' செய்தம். அதால அவை தொழில்கிழில் எண்டு சாட்டுச் சொல்லேலாது தானே. எல்லாரும் வந்திட்டினம்" எண்டு தங்கட கெட்டித்தனத்தை தாங்களே சொல்லிக் காட்டிச்சினம். இப்பிடி ஒரு அஞ்சு சதத்துக்கும் பெறுமதியில்லாத கூட்டத்துக்காக, அவ்வளவு கடற்றொழிலாளரும் கடலுக்குப் போகக்கூடாது எண்டு மறிக்கிறது எவ்வளவு பெரிய அறியாயம்? உங்கட கூட்டத்துக்காக அந்தத் தொழிலாளர்களின்ர குடும்பங்கள் உலை வைக்காமல் பசியில துடிக்க வேணுமோ? எல்லாம் எலக்சன் வரைக்கும் தானே உந்தக் கூத்து. பாப்பம், அதுக்குப் பிறகு சனமே உவையளுக்குத் தடை போட்டிடும் கண்டியளோ. அதுக்குப் பிறகு காலம் முழுக்க இவையள் அற்றகுளத்து அறுநீர்ப் பறவையள் தான்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.