ஆக்கிறதுக்கு ஆயிரம் வருசம், அழிக்கிறதுக்கு அஞ்சு நிமிசம். யாழ்ப்பாணம், மணல்காட்டில இருக்கிற சவுக்கங்காட்டுக்கு இப்ப இதுதான் நடந்து கொண்டிருக்குது. கடலரிப்பைத் தடுக்கிறதுக்கும், வெக்கையைக் குறைக்கிறதுக்கும். மணல் காத்தில அள்ளுண்டு பரவாமல் இருக்கிறதுக்காகவும் மணல்காட்டில சவுக்கம் கண்டுகளை இயக்கம் நட்டது. அந்த மண்ணின்ர சுவாத்தியத்துக்கு அந்தச் சவுக்கம் கண்டுகள் மூச்சா வளர்ந்து காடா மாறிட்டுது. இந்தச் சவுக்கம் காட்டால இயக்கத்துக்கும் ஒரு பிரியோசனம் இருந்தது. முந்தி சண்டைக்காலத்தில மணல்காட்டால இயக்கத்தின்ர கடல்போக்குவரத்து நடந்தது. அதால மணல்காட்டில இயக்கம் தங்கி நிக்கவேண்டியிருக்கும். அந்த ஏரியா முழுக்க ஒரே வெட்டவெளியா இருந்ததால், ஹெலியில வாற ஆமிக்காரர் இயக்கம் எங்க இருக்கெண்டு பார்த்து, சுட்டுப்போடுவாங்கள். அதால இரவு நேரத்திலதான் கடலால இயக்கக்காரர் போய் வாறவை. ஆனால் பிறகு சவுக்கம் காடு அங்க உருவானதால, இயக்கம் அதுக்க மறைஞ்சிருந்து, நினைச்ச நேரத்தில கடலால போய்வரக் கூடியமாதிரி இருந்திச்சு. இப்ப இயக்கம் இல்லாட்டியும். அவங்கள் உருவாக்கின சவுக்கம்காடு, அந்த ஏரியாவை இப்பவும் கடலரிப்பில இருந்தும் வெக்கையில இருந்தும் காப்பாத்திக்கொண்டுதான் இருக்குது.
இப்பிடி இயக்கம் பெரும் கஷ்டப்பட்டு உருவாக்கின அந்தச் சவுக்கம் காட்டை, அதின்ர பெறுமதி தெரியாத சிலர் அழிக்கிறதுக்கு வெளிக்கிட்டிருக்கினம். சவுக்கம் மரத்தை பச்சையா வெட்டிக்கொண்டு போக ஏலாது. கொண்டுபோனால் பொலிஸ் பிடிக்கும். ஆனால் பட்டுப்போன சவுக்கம் மரத்தை விறகுக்காக எடுத்துக்கொண்டு போகலாம். ஈருருளியில விறகுகட்டி யாவாரம் செய்யி றவை. எப்பவாவது இருந்திட்டு இந்தச் சவுக்கம்காட்டுக்கு வந்து, அங்க பட்டுப்போய்க் கிடக்கிற மரங்களை வெட்டியெடுத்து, சைக்கிளில கட்டிக்கொண்டு போறவை. ஏதோ வயித்துப்பிழைப்புக்கு அவையள் விறகெடுக்கிறதை அங்கத்தைச் சனங்களும் பெரிசாக் கண்டுகொள்ளுறேலை. இப்ப என்னெண்டால், பட்டா வாகனங்களில் வாற கொஞ்சப்பேர் மரத்தை அரியிற மிஷினைக் கொண்டந்து சவுக்கம் மரங்களை வெட்டிக்கொண்டு போகத் தொடங்கியிருக்கினம். பட்ட மரங்கள் எண்டதால பொலிஸும் அவையைப் பிடிக்க ஏலாது.
இப்பிடி வாகனங்களில ஏத்துற அளவுக்கு, அந்தச் சவுக்கம் காட்டில இருக்கிற மரங்கள் பெருவாரியா என்னெண்டு பட்டுப்போகுது எண்டு யோசிப்பியன். அதுக்கு அவை ஒரு பிளான் வைச்சிருக்கினம். மரத்தை வெட்ட வாகனத்தோட வாறதுக்கு நாலைஞ்சு கிழமைக்கு முதல், உந்துருளியில் அவையள் வருவினம். சவுக்கம்காட்டுக்குள்ள தண்ணி,வெற்றியோட ஒரு பார்ட்டி போட்டு, கடலுக்குள்ள இறங்கி குளிச்சுப்போட்டு. மம்மல் பொழுதிலதான் வெளிக்கிடுவினம். அப்பிடிப் போகேக்க நாலைஞ்சு சவுக்கம் மரத்துக்கு மண்ணெண் ணெய் ஊத்தி, ஒரு நெருப்புக்குச்சியைத் தட்டி எறிஞ்சு போட்டுத்தான் போவினம். பிறகென்ன, சவுக்கம்காடே பத்தியெரிஞ்சு, பட்டுப்போடும். ஆரும் கண்டு கேட்டாலும், 'சிகரெட் பத்த வைச்ச நெருப்பு இப்பிடி காட்டில் பிடிச்சிட்டுது' எண்டு சமாளிப்பினமாம். அதையும் மிஞ்சி சனம் உண்மையைக் கண்டுபிடிச்சு, அவை விறகுவெட்ட வரேக்க மறிச்சால், வாளுகள் பொல்லுகளைக் காட்டிக் கலைச்சுப் போட்டு மரங்களை வெட்டிக்கொண்டு போறாங்களாம். வழக்கம் போல பொலிஸ்காரர் அணிலேற விட்டிட்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கினம். அவைக்கென்ன, இயக்கம் வைச்ச காடு இல்லாமல் போனால் சந்தோசம் தானே? ஆனால் இயற்கை தான் அங்க இனி அழியப்போகுது. ஆராவது அதைக் காப்பாத்துங்கோவன்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.