எந்தவொரு நாட்டிலிருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத வரியை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் புதிய வரி விதிப்பால் நூறு நாடுகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரியாக கம்போடியாவிற்கு 49 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், அதிக வரி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
சீனா மீது 34 சதவீதம், இந்தியா மீது 26 சதவீதம், ஜப்பான் மீது 24 சதவீதம், பாகிஸ்தான் மீது 29 சதவீதம் என பெரும்பாலான ஆசிய நாடுகள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் மீது 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளை குறிவைத்து 10 சதவீதம் முதல் 49 சதவீதம் வரை அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியம் மீது 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சுவிட்சர்லாந்து மீது 37 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியானது 27 நாடுகளைப் பாதிக்கும்.
புதிய வரிகளை விதிக்கும் 100 நாடுகளின் பட்டியலை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய வரிகள் ஏப்ரல் ஐந்தாம் திகதி முதல் அமலுக்கு வருகின்றன. கனடா மற்றும் மெக்சிகோ மீது முன்னர் விதிக்கப்பட்ட வரிகளைத் தவிர, வேறு எந்த புதிய வரிகளும் விதிக்கப்படவில்லை.
முன்னதாக, அந்த நாடுகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல்களுக்கு 25 சதவீத புதிய வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
புதிய வரிகளை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி, வரிகள் விதிக்கப்பட்ட நாள் அமெரிக்காவில் விடுதலை நாள் என்று அழைக்கப்படும் என்று கூறினார்.
இது அமெரிக்காவிற்கு ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், சில உலகத் தலைவர்கள் வரிகள் விதிக்கப்பட்டதற்கு விரக்தியுடன் பதிலளித்துள்ளதாகவும், அதிகரித்து வரும் வர்த்தகப் போர் குறித்து கவலை தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.