வெடுக்குநாறி ஆதிசிவனின் அதிசயம்!
வவுனியா நெடுங்கேணியில் கட்டுப்பாட்டை இழந்த பொலிஸ் வாகனம் வீட்டுக்குள் புகுந்தது. இந்தச் சம்பவம் நெடுங்கேணி நகரப் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.
முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான வாகனம் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வீட்டுக்குள் சென்று விபத்துக்குள்ளாகியது. வீடு பகுதியளவில் சேதமடைந்ததுடன் வாகனமும் சேதமடைந்தது. பொலிஸ் வாகனம் புகுந்த இடத்துக்கு அருகில் சுமார் 40 மாணவர்கள் வரையில் கற்றுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீடு புகுந்ததாகச் சொல்லப்பட்டாலும், சம்பவத்தை நேரில் பார்வையிட்ட மக்கள் பொலிஸார் மதுபோதையில் இருந்திருக்கலாம் எனச் சந்தேகின்றனர்.
இப்போது நாம் சொல்லவரும் விடயம் அதுவல்ல. கடந்த மார்ச் மாதம் சிவராத்திரியன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்றன. ஆலய வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா பொலிஸார் செயற்பட்டிருந்தனர். அன்றைய தினம் இரவு பக்தர்களை தாக்குதல் நடத்தி அங்கிருந்து விரட்டியதுடன் அவர்களை கைது செய்திருந்தனர். ஆலயத்தினுள் சப்பாத்துக் கால்களுடன் அத்துமீறி நுழைந்தும் இருந்தனர். இவற்றையெல்லாம் செய்தது புளியங்குளம் பொலிஸார். கைதானவர்களை ஏற்றிச்சென்றதும் நேற்று விபத்துக்குள்ளான வாகனத்தில்தான்.
இதனால்தான், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அட்டகாசம் - அநியாயம் செய்த பொலிஸாருக்கு ஆதிசிவன் தக்கபாடம் படிப்பித்திருக்கின்றார் என, இந்தச் சம்பவத்தில் கைதானவர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.