மனித உரிமை ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு
(ஆதவன்)
ஆசிரியருக்கான நியமனக் கடிதம் மீளப்பெறப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண் பட்டதாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனக் கடிதங்களை வழங்கியிருந்தார். நியமனக் கடிதம் வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பட்டதாரி ஒருவரிடம் இருந்து அது மீளப்பெறப்பட்டிருந்தது. இதையடுத்தே தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
அந்தப் பட்டதாரியின் முறைப்பாட்டில் உள்ளதாவது:-
நான் ஆசிரியர் நியமனக் கடிதத்தை கேட்டுப் பெறவில்லை. எனக்கு வழங்கிய நியமனக் கடிதத்தை மீளப்பெற்றதன் மூலம் உளரீதியான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளேன். அத்துடன் சமூகத்தில் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாது, எனது நியமனக் கடிதத்தை மீளப்பெற்றதன் மூலம் நான் அரச சேவையை முறை தவறிப் பெற்றதாக சமூகத்தில் கருத்துகள் உருவாகின்றன. ஆதலால், எனக்குரிய பரிகார நீதி வழங்கப்படவேண்டும் என்று அந்தப் பட்டதாரி குறிப்பிட்டுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.