யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின்போது பொலிஸார் குவிக்கப்பட்டதால், அந்தப் பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
'வேரிலிருந்து விழுது வரை' என்ற தொனிப்பொருளில் இந்த நடைபவனி நடைபெற்றது. அந்த நடைபவனியில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொள்கின்றனர் என்று கிடைத்த தகவலுக்கு அமையவே பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கலைப்பீட பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பேரணியல்ல மாறாக நடைபவனியே என்ற விடயம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. எனினும், பொலிஸாரின் தொடர்ச்சியான அறிவுறுத்தலுக்கு அமைய, வேட்பாளர்களை அனுமதிப்பதில்லை என்ற இணக்கப்பாட்டுடன் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கம் முன்பாக ஆரம்பித்த நடைபவனி, பிரதான நுழைவாயில் ஊடாகச் சென்று பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலுடாக மீண்டும் கலைப்பீடத்தை வந்தடைந்தது.
நடைபவனியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பல்கலைக்கழக பழைய மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.