ஐ.பி.எல். தொடரின் 38 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 9 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை, வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரராகக் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஷேக் ரஷீத் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அறிமுக வீரரான ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடி 32 ஓட்டங்கள் சேர்த்தார். 4ஆவது விக்கெட்டுக்காக இணைந்த ஜடேஜாவும், ஷிவம் துபேயும் 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாகச் சேர்த்தது. ஷிவம் துபே 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜடேஜா ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய எவரும் சோபிக்கவில்லை.
177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரிக்கல்டன் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினார். அவருடன் சூர்யகுமார் யாதவ் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். இருவரும் அரைச்சதம் கடந்தனர்.
15.4 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றியைப் பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோஹித் சர்மா 76 ஓட்டங்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
இந்த வெற்றி மும்பை அணிக்குக் கிடைத்த 4 ஆவது வெற்றியாகும். சென்னையின் அணியின் 6ஆவது தோல்வி இதுவாகும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.