வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை பரவலாக மழை கிடைக்கும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் பரவலாக மழை கிடைக்க தொடங்கும். ஆயினும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் மழை பரவலாக கிடைக்க தொடங்கும். இதுவரை வடகீழ்ப் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. இதனால் இவ்வாண்டு வடகீழ்ப் பருவமழை குறைந்து மழையற்ற மாரியாக அமையுமோ என பலர் அச்சப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. ஆனால் முன்னரே குறிப்பிட்டபடி இவ்வாண்டு வடகீழ்ப் பருவமழை சராசரியை விட சற்று அதிகமாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் வடகீழ்ப் பருவமழை அதிகரிக்க தொடங்கும். தரவுகளின் அடிப்படையில் இவ்வாண்டு வடக்கு மாகாணத்தின் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சி 1240 மில்லி மீற்றர் விட கூடுதலான மழைவீழ்ச்சியை நாம் பெற்று விட்டோம். ஆனால் கிழக்கு மாகாணத்தின் சராசரி மழைவீழ்ச்சியை பெற நாம் இன்னமும் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்.
வழமையாக வடக்கு மாகாணத்தை விட கிழக்கு மாகாணமே கூடுதலாக மழை வீழ்ச்சியைப் பெறுவதுண்டு. ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக வடக்கு மாகாணம் அதிக மழையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றம், எதிர்காலத்தில் பல வியக்கத்தக்க ஆச்சரியங்களையும், விரும்பத்தகாத மாற்றங்களையும் எங்கள் பிரதேசங்களின் வானிலைக் கோலங்களில் ஏற்படுத்தும் என மேலும் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.