வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தால் காய்ந்த நெல்லை கிலோ ஒன்று 125 ரூபா வீதம் கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ந. ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், தற்போதைய காலபோக நெற்செய்கை அறுவடை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் எமது விவசாயிகளின் நன்மை கருதியும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களால் விவசாயிகளுக்கு செய்யக்கூடிய உதவியாகவும் காய்ந்த நெல்லை கிலோ ஒன்று 125 ரூபா வீதமும் காயாத நெற்களை 115 ரூபாய் வீதம் கொள்வனவு செய்வதற்கு வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் எதிர்வரும் பொங்கல் தினத்திற்கு பின்னர் வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கம் நெல்லை கொள்வனவு செய்ய உள்ளது. விவசாயிகள் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு நெல்லை வழங்க விரும்பின் ஓமந்தை, ஆறுமுகத்தான்புதுக்குளம், கல்நாட்டியகுளம், ஈச்சங்குளம் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சியசாலைகளில் நெல்லை கையளிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை வவுனியாவின் சங்கத்திற்குரிய கட்டிடங்களிலும் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதன் காரணமாக சுமார் 2,700 மெட்ரிக்தொன்னுக்கும் அதிகமான நெல்லை இம்முறை வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கம் கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளது.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.